அவர் இருந்திருந்தா இது நடந்து இருக்குமா.. 2 சீன நிறுவனங்களுடன் கூட்டு சேரும் TATA.. ஏன்?
இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தி துறையில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் (Tata Group) துணை நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) ஆனது 2 சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர திட்டமிடுவதாக, அதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான ஷாவ்மீ (Xiaomi) மற்றும் ஒப்போ (Oppo) ஆகிய நிறுவனங்களுடன் தங்கள் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க, டாடா எலக்ட்ரானிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஆப்பிள் (Apple) நிறுவனத்தை பின்னுக்கு தள்ள முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ மற்றும் ரோபோ ஆகிய சீன நிறுவனங்களுடனான கூட்டணி மூலம், டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகள் (Electronics manufacturing services- EMS) துறையில் ஆப்பிள் நிறுவனத்தை தாண்டிய, ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாற வேண்டும் என்கிற லட்சியத்தை அடைய வழிவகுக்கலாம்.
முன்னதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் இணைப்புகளுக்கான முக்கிய சப்ளையராக தன்னை நிலைநிறுத்தி கொண்டது. இப்போது, இந்நிறுவனம் கேமரா மற்றும் டிஸ்பிளே மாட்யூல்ஸ் போன்ற அதிக மதிப்புள்ள கூறுகளின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. இது தான் ஃபாக்ஸ்கானின் பிஸ்னஸ் மாடல் ஆகும். ஃபாக்ஸ்கான் தான் ஆப்பிளின் முதன்மை உற்பத்தி கூட்டாளர் ஆகும். அந்நிறுவனத்தின் பிஸ்னஸ் மாடலை டாடா எலக்ட்ரானிக்ஸ் பின்பற்ற உள்ளது போல் தெரிகிறது.
தொழில்துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, டாடா எலக்ட்ரானிக்ஸின் இந்த திட்டம் அதன் செயல்பாடுகள் மற்றும் திறன்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். முக்கியமான 2 சைனீஸ் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்வதன் மூலம், டாடா எலக்ட்ரானிக்ஸ், பரந்த அளவிலான மின்னணு சாதனங்களை தயாரிப்பதில் மதிப்புமிக்க அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற முடியும்.
இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பார்ட்னர் ஆக மாறும் வாய்ப்புகள் டாடா எலக்ட்ரானிக்ஸ்-க்கு கூடிவரும். இதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் முதலில் விவோ நிறுவனத்தை தான் அணுகியது. டிக்சன் டெக்னாலஜிஸ் உடனான விவோவின் சமீபத்திய கூட்டு முயற்சியால், டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் விவோ நிறுவனங்களுக்கு இடையேயா கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதன் பின்னரே ஷாவ்மீ மற்றும் ஒப்போ உடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது போல் தெரிகிறது. விவோ மற்றும் டிக்சன் இடையேயான புதிய கூட்டாண்மையானது ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மீ மற்றும் ஒப்போ ஆகிய 2 நிறுவனங்களுமே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் டிக்சன் டெக்னாலஜிஸ் போன்ற தற்போதைய உற்பத்தியாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்க முடியும். டாடா எலெக்ட்ரானிக்ஸ் அதன் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தி, அதிக போட்டி விலைகளுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதால், டிக்சன் மற்றும் பிற உற்பத்தியாளர்கள் தங்கள் உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம்.
ஷாவ்மீ மற்றும் ஒப்போ தவிர்த்து டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆனது மைக்ரோசாப்ட், டெல் மற்றும் ஹெச்பி போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இஎம்எஸ் துறையில் பன்முகப்படுத்தப்பட்ட போட்டியாளராக மாறுவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆனது அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்பது புதிய தொழிற்சாலைகளை நிறுவும் திட்டமிட்டுள்ளது. ஆக 2025 ஆம் ஆண்டில்.. வலுவான ஆதரவு, மூலோபாய கூட்டாண்மை மற்றும் உயர் மதிப்பு கூறுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது உலகளாவிய இஎம்எஸ் துறையில் ஒரு முக்கிய சக்தியாக மாற உள்ளது!


Click it and Unblock the Notifications








