"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!
காவல்துறையினர் மக்களின் பாதுகாவலனாக பல்வேறு இடங்களில் பணியாற்றி மக்கள் ஆபத்தான விஷயங்களுக்குள் சிக்காமல் இருக்க அறிவுரை வழங்கி வருகின்றனர். மக்கள் ஒரு சில ஆபத்துகளில் சிக்கினாலும் அவர்களின் காவலனாக அந்த இடத்தில் வந்து நிறுபவர்கள் காவல்துறையே. இந்த நிலையில் காவல்துறையினரே இதில் சிக்குகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
இதுகுறித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்த கருத்துகள் குறித்து பார்க்கலாம். இணையதளத்தில் மோசடி என்பது தொடர்கதையாக இருக்கிறது. பிட்காயினில் முதலீடு செய்ய வைத்து பெரும்பாலான மோசடிகள் நடக்கிறது. பிட்காயின் முதலீட்டில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு இரட்டிப்பு தொகையாக திரும்பப் பெறப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். இதை நம்பி மக்கள் முதலில் சிறிய தொகையாக முதலீடு செய்கிறார்கள்.

இரட்டிப்பு தொகை செலுத்துவதாக ஆசை வார்த்தைகள்
பின் படிப்படியாக அதிக தொகை கேட்கப்படுகிறது. கூடுதல் தொகை செலுத்தினால் தான் உங்கள் உறுப்பினர் அட்டை கிடைக்கும் என கூறி தொகை கேட்கிறார்கள். பின் குறிப்பிட்ட அளவு அதிக தொகை கூறி இதை முதலீடு செய்தால்தான் உங்களது இருப்புத் தொகை வழங்க முடியும் என கூறி பெரிய அளவிலான தொகையை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அதன்பின் நீங்கள் செலுத்திய தொகை ஒன்றும் இல்லாமல் போகும். சென்னை மாநில ஆணையர் தெரிவித்த தகவலின்படி, காவலர்களே இதில் சிக்குகிறார்கள்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவலர்கள்
இதுபோன்ற குற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதுகுறித்து புலன் விசாரணை நடத்த வேண்டிய காவலர்களே இதுபோன்ற மோசடியில் சிக்கி ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
இந்த முறையில் மோசடிக்கு உள்ளானால் பணத்தை திரும்பப் பெறுவது மிக கஷ்டம். இந்த தொகைகள் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பணம் சிக்கும் பட்சத்தில் சர்வதேச போலீஸார் உதவி தேவைப்படும். சமயங்களில் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. செலுத்தி பணம் அவ்வளவு தான். சென்னையில் ஒரு காவலர் ரூ.20 லட்சம் எனவும் மற்றொரு காவலர் ரூ.30 லட்சம் எனவும் பணத்தை இழந்திருக்கின்றனர்.

சமூகவலைதள தகவலை நம்ப வேண்டாம்
பிட்காயின் முதலீடு என்று வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளம் மூலமாக தங்களை தொடர்பு கொண்டு ஈர்ப்பான திட்டத்தை வழங்கி பணம் செலுத்த சொன்னால் அதில் ஏமாற வேண்டாம். வங்கி வழங்கக்கூடிய வட்டி விகிதத்தை விட யாராலும் அதிகமாக வழங்க முடியாது. நீங்கள் செலுத்தும் தொகைக்கு இரட்டிப்பாக வழங்குகிறோம் என பேராசை தூண்டி உங்களை ஏமாற்றுவார்கள் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என சொல்பவர்கள் எப்போதும் பணத்தை திருப்பிக் கொடுத்ததில்லை. உழைப்பில்லாமல் வளர வேண்டும் என்ற பேராசை வேண்டாம், பேராசை பெரு நஷ்டம், எனவே பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். இதனால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே பிட்காயின் மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தமிழக டிஜிபி கேட்டுக் கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டப் பழக்கம்
சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பதும் ஒருவகை போதைதான். ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பம் பாதிக்கப்பட்டது அதுமட்டுமின்றி இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது மட்டுமில்லை சூதும் ஒருவகை போதைதான். இதில் இப்போது ஜெயித்துவிடலாம், விட்டதை பிடித்துவிடலாம் என சொத்தை இழந்தவர்கள் ஏராளம். எனவே ஆன்லைன் ரம்மி விளையாடுவதை நிறுத்துவது சிறந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு
கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது. பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம். செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவல், புகைப்படம் உட்பட வங்கி கணக்கு வரை செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது. எனவே செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவதிலும் அதை கவனமாக வைத்திருப்பதிலும் கவனம் தேவை.


Click it and Unblock the Notifications