கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!
கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கால் மூலம் நேற்று நடத்தி வைத்தார். தற்பொழுது அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகிறது. மேலும் 6ம் கட்ட அகழாய்வில் பல நம்பமுடியாத அரிய பொருட்கள் கிடைத்துள்ளது, அதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

கீழடியில் தற்பொழுது 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஊரடங்கிற்குப் பின் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை கீழடி பகுதியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சிகள் மூலம் தமிழர்கள் தொன்மையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இன்னும் பல திடுக்கிடும் தகவல்களும் ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது.

குறிப்பாகச் சமீபத்தில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்டங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்படிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை அனைத்தும் தொன்மையானது என்றும், கீழடியில் வாழ்ந்த மக்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து அறிவுடன் வளைந்துள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அதேபோல், நாகரிகத்தின் உச்சம் எனச் சொல்லப்படும் 3 விதமான கட்டுமான வழிகளையும் கீழடியில் வாழ்ந்த சமூகத்தினர் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பின்பற்றியுள்ளனர் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், அந்த காலகட்டத்தில் வர்த்தகம் நடந்ததற்கான ஆதாரங்களும் கீழடி ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கீழடி சமூகம், தமிழர் நாகரிகத்துடன் எழுத்து அறிவுடன், சரியான கட்டுமான வழிகள் மற்றும் சமத்துவத்தைப் பின்பற்றி வந்துள்ளனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இங்கு வாழ்ந்தவர்களில் பெரும்பாலோனோர் சான்றோர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, அண்மையில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் பலவிதமான எலும்பு படிமங்களும் கீழடி சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளது. குறிப்பாக அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் எலும்புக் கூடு கீழடி தளத்தில் கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பின் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பல அரிய பொருட்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நம்ப முடியாத பல அரிய பொருட்களை வழங்கி வரும் கீழடி ஆராய்ச்சி, உலகத்தை தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது. இங்குக் கிடைத்த பொருட்களைப் பாதுகாக்க இடமில்லாததால், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி அதிகாரிகள் தங்களின் ஆராய்ச்சி பணியைத் துவங்கினர். இதற்குத் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள். போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக கீழடியில் உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று போராடினர்.

தமிழர்களின் போராட்டத்திற்குச் செவி சாய்த்த தமிழக அரசு, விரைவில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கால் மூலம் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவை நேற்று நடத்திவைத்தார். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 12 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications