12525 கிராமத்துக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்த முதல்வர்
பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கண்ணாடி இழை கேபிள்(Optical fibre cable) பதிக்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாரத்நெட் திட்டமானது ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் 12,525 கிராமங்களுக்கு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் பாதுகாப்பான இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் ரூ.1,627.83 கோடி மதிப்பிலான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சியில் உள்ள முத்தலக்குறிச்சி கிராமப் பகுதியில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கண்ணாடி இழை கேபிள் (Optical Fibre Cable) பதிக்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். TANFINET நிறுவனத்தின் மூலமாக இந்த பணி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி முத்தலகுறிச்சி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதிவேக இணையம் வழங்குவதே நோக்கம்
தமிழகத்தில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளை "ஆப்டிகல் ஃபைபர் கேபிள்" மூலமாக இணைத்து அதிவேக இணையத்தை வழங்குவதே பாரத்நெட் திட்டத்தின் நோக்கமாகும். தமிழக அரசு இந்த திட்டத்தை TANFINET என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் மூலமாக செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் அனைத்து 12,525 கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க முடியும்.

நான்கு தொகுப்புகள்
இந்த திட்டமானது நான்கு தொகுப்புகளை கொண்டிருக்கிறது. தொகுப்பு A- காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கலபட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தொகுப்பு B- கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், தொகுப்பு C- நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் தொகுப்பு D- கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம்
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் டிஜிட்டல் சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம் உள்ளிட்டவைகள் இணையதள இணைப்பின் மூலம் வழங்க முடியும். குறிப்பாக Triple Play Service (தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம்) ஆகியவை இந்த சேவையின் மூலம் வழங்க இயலும். அதேபோல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அதிவேக இணையதள சேவையினை வழங்க முடியும்.
பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவை
தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை வழங்கவும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இருக்கும் தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள் என்றால் என்ன?
ஆப்டிகல் ஃபைபர் கேபிள் என்பது கண்ணாடிகள், பிளாஷ்டிக் ஆப்டிகல் ஃபைபர் கோர் மற்றும் ரேப்பிங் லேயர் ஆகியவற்றைக் கொண்ட தகவல் தொடர்பு கேபிள் ஆகும். ஆப்டிகல் ஃபைபரின் உள்சிக்னல் பரிமாற்றமானது லேசர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் அதிவேகம், அதிக திறன் மற்றும் நீண்ட தூர சேவை உள்ளிட்டவைகளை வழங்க முடியும்.


Click it and Unblock the Notifications