நிம்மதி பெருமூச்சு.. ஆன்லைன் விளையாட்டுக்கு தடை- தமிழக அரசு அவசர சட்டம்!
தமிழகத்தில் ஆன்லைன் கேமிங்கை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றவுடன் அரசாணை வெளியிடப்படும். ஆன்லைன் கேமிங் திடீர் தடையா என்று நினைக்க வேண்டாம்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடுப்பது தொடர்பான புது சட்டம்..
ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
ஆன்லைன் விளையாட்டுகளை தடுப்பது தொடர்பான புது சட்டம் இயற்றுவது குறித்து அறிவுரை வழங்க சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு கடந்த ஜூன் மாதம் தமிழக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

அரசாணை வெளியானதும் விரிவான தகவல்கள்..
இந்த விவாதத்தில் பள்ளி மாணவர்களிடையே ஆன்லைன் கேமிங்கள் ஏற்படுத்திய தாக்கம், பொது மக்கள் கருத்து, கலந்தாலோசனைக் கூட்டம் உட்பட சட்டத் துறை ஆலோசனையும் பெற்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்படி தமிழக அரசு ஆன்லைன் கேமிங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தை வரையறை செய்தது.
இந்த சட்டம் குறித்தும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு, இறுதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் ஆன்லைன் கேமிங் என்ற விவரங்கள் மட்டுமே தெரியவந்திருக்கிறது. அரசாணை வெளியானதும் விரிவான தகவல்கள் தெரியவரும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..
முந்தைய அதிமுக ஆட்சியில் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய காரணம் என்ன என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் ரம்மி விளையாட்டை விளையாடினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டம் இயற்றப்பட்டு இருந்தது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

முன்னதாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
இதையடுத்து இணையவழி விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட முடியாது எனவும் முறையான புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் ரத்தானால் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போது புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆன்லைன் கேமிங்..
மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பதிலளித்தது.
அதில் ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன்மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிந்து வைத்திருக்கிறது.அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையின் படி சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிட்டது.

வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்
சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பதும் ஒருவகை போதைதான். ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வந்தது. இதனால் பல குடும்பம் பாதிக்கப்பட்டது அதுமட்டுமின்றி இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர்.மது மட்டுமில்லை சூதும் ஒருவகை போதைதான். இதில் இப்போது ஜெயித்துவிடலாம், விட்டதை பிடித்துவிடலாம் என சொத்தை இழந்தவர்கள் ஏராளம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதன்படி அதிமுக அரசு நவம்பர் 21, 2020 ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

விரைவில் ஒப்புதல்..
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தற்போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இந்த சட்டம் விரைவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் பெறப்பட்டு வெளியடப்படும் என உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் க.பணீந்திர ரெட்டி குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications