ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று திட்டிய ஆசிரியர் பெற்றோர்! விஷம் குடித்த மாணவன்!
ஆன்லைன் மூலம் நடத்திய பாடம் புரியாத காரணத்திற்காக ஆசிரியரும் பெற்றோரும் திட்டியதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசித்து வருபவர் பாண்டியன், இவர் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவரின் மகன் அபிஷேக் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் தான் அபிஷேக்கிற்கும் வகுப்புகள் இதுவரை நடத்தப்பட்டு வந்துள்ளது என்று அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு மூலமாக சொல்லித்தரப்படும் பாடங்கள் அபிஷேக்குக்கு புரியவில்லை என்பது அண்மையில் தெரியவந்துள்ளது. இதனால், சரிவர அவரால் படிக்க முடியாமல் திணறி வந்துள்ளார். சரியாக படிக்காத காரணத்திற்காக ஆசிரியரும் பெற்றோரும் அபிஷேகத்தை திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அபிஷேக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தினால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








