ரேஷன் கார்டுதாரர்களே.. இந்த தேதியை மறந்திடாதீங்க! eKYC-க்கு சிறப்பு முகாம்..
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சிறப்பு முகாம் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் உள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க eKYC பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

eKYC முறையில் ஆதார் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பயன்படுத்தி குடும்ப அட்டையில் (Ration Card) உள்ள பயனாளியின் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் பொருட்களைப் பெறும்போது ஏற்படும் அடையாளச் சரிபார்ப்பு சிக்கல்களைத் தவிர்க்கவும், குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் இதுவரை 96.48 சதவீதம் eKYC பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பயனாளிகளின் eKYC பதிவை முடிப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாமின் மூலம் இதுவரை eKYC பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பதிவை நிறைவு செய்து பயன்பெறலாம்
சிறப்பு முகாம் விவரங்கள்
சிறப்பு முகாம் தேதி: 19.09.2026
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகள்
விலக்கு: இடைதேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதி நியாய விலைக் கடைகளில் மட்டும் இந்த முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் மட்டும் பதிவு செய்தால் போதாது, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாகக் கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்ய வேண்டும். இதுவரை eKYC செய்யாதவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இதுவரை குடும்ப அட்டையில் eKYC பதிவு செய்யாத பயனாளிகள், அறிவிக்கப்பட்டுள்ள முகாம் நாளில் தங்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று eKYC பதிவை முடித்துக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. விடுபட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி தங்களது கைரேகையைப் பதிவு செய்து, eKYC செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறக் காத்திருப்பவர்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தகுதியானவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளும் வழக்கம்போல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை TNPDS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications
