திக்திக் நிமிடங்கள்.. ஸ்மார்ட்போன் தொலைந்தது.. ஜேம்ஸ் பாண்ட்டாக மாறிய தமிழன்.. உதவியது யார் தெரியுமா?
நிமிடத்திற்கு நிமிடம் பதட்டம், கத்தி போன்ற பார்வை, 7ம் அறிவை தூண்டிய தருணம் என்று தமிழ்நாட்டில் ரியலாக நடந்த ஜேம்ஸ் பாண்ட் கதை பற்றிய பதிவு தான் இது. ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது.
ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது நம் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. என்ன தான் நாம் விழிப்புடன் இருந்தாலும், திருடர்கள் நம் கண்களில் மண்ணை தூவி, நொடி பொழுதில் பொருட்களை திருடி விடுவார்கள். அப்படி, நாகர்கோவிலில் இருந்து திருச்சி வரை, நாகர்கோவில் கச்சேகூட எக்ஸ்பிரஸ் (Nagercoil Kacheguda express) ரயிலில் பயணித்த நபரின் உடைமைகள் மற்றும் ஸ்மார்ட்போன் திருடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தொலைந்தது: ஒரு பயணத்தின் போது, இப்படி நடப்பது பொதுவாக ஒரு மோசனமான அனுபவத்தை வழங்கும். ஆனால், இங்கு கூகுள் மேப்ஸ் உதவியுடன் இதுவொரு திரில்லர் கதையாக மாறிவிட்டது. ராஜ் பகத் என்பவரின் தந்தை சமீபத்தில் நாகர்கோவில் கச்சேகூட எக்ஸ்பிரஸ் மூலம் நாகர்கோவிலில் இருந்து திருச்சி பயணித்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 3 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இவரது உடைமைகள் திருடப்பட்டுள்ளது.
ரயில் முழுக்க இவரது உடைமைகளை தேடி கிடைக்காத தந்தை. நள்ளிரவு 3.41 மணிக்கு அவரது மகன் ராஜ் பகத்தை இவருடன் பயணித்த பயணித்த பயணியின் மொபைலில் இருந்து அழைத்து, நடந்த விபரங்களை தெரிவித்திருக்கிறார். ராஜ் பகத் உடனே கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் அம்சத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று முயற்சி செய்திருக்கிறார்.
லொகேஷன் ஷேரிங்: அதிர்ஷ்டவசமாக, ராஜ் பகத் தந்தையின் போனில் லொகேஷன் ஷேரிங் ஆன் செய்யப்பட்டிருந்ததனால், ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெளிவாக தெரிந்தது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஸ்மார்ட்போன் மற்றொரு ரயில் மூலம் பயணிப்பதை கூகுள் மேப்ஸ் தகவல் தெளிவாக காண்பித்தது.
ராஜ் பகத் தனது நண்பர்கள் சிலர் மற்றும் அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றார். ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் நாகர்கோவில் ரயில் நிலையம் என்று தெளிவாக கூகுள் மேப்ஸ் தகவல் காண்பித்துள்ளது. இருப்பினும் அத்தனை பயனர்களுக்கு மத்தியில் யாரிடம் போன் இருக்கிறது என்பதை இவர்களால் கணிக்க முடியவில்லை.
நாகர்கோவில் பேருந்துநிலையம்: இருப்பினும், ராஜ் பகத் மற்றும் அவரது குழுவினர்கள் பொறுமையாக கண்காணித்துள்ளனர். ஸ்மார்ட்போன் லொகேஷன் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் நோக்கி நகர்ந்துள்ளது. பெருந்துநிலையத்தில் ராஜ் பகத் அருகில் ஸ்மார்ட்போன் லொகேஷன் இருப்பதாக காண்பித்துள்ளது. அவர் சந்தேகப்படும்படியாக யார் இருக்கிறார்கள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் போல நோட்டம்விட்டிருக்கிறார்.
திருடன் மாட்டியது எப்படி: திடீரென ஸ்மார்ட்போன் லொகேஷன் ராஜ் பகத் முன்னால் வெறும் இரண்டு அடி தூரத்தில் இருப்பதாக காண்பித்துள்ளது. அப்போது தான், ராஜ் பகத்தின் கழுகு பார்வையில் CITU லோகோ பொறிக்கப்பட்ட கைப்பையுடன் ஒருவர் செல்வதை அவர் கண்டுள்ளார். அது ராஜ் பகத் தந்தையின் பை தான் என்பதை உணர்ந்திருக்கிறார்.
காரணம், ராஜ் பகத் தந்தை தொழிற்சங்க செயற்பாட்டாளர் என்பதனால் அந்த பை அவருடையது என்பது உறுதியானது. கூகுள் மேப்ஸ் தகவலும் அந்த நபர் இருந்த இடமும், அவர் கையில் இருந்த பையும் அவர் தான் திருடன் என்பதை தெள்ளத்தெளிவாக காண்பித்துள்ளது. இறுதியாக, அந்த நபரை வளைத்துப்பிடித்து, ராஜ் பகத் தந்தை ரயிலில் தவறவிட்ட பொருட்களை பேருந்து நிலையத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
இனிமேல், நீங்கள் எங்காவது பொது பேருந்து மூலம் பயணிக்கிறீர்கள் என்றால், லொகேஷனை ஆன் செய்து பயணியுங்கள். அது தான் பாதுகாப்பானது. ஒரு வேலை உங்கள் போன் தொலைந்தால் கூட, அதை எளிதில் கண்டுபிடிக்க உதவக்கூடியது.


Click it and Unblock the Notifications








