Infosys வேலையை உதறித்தள்ளிய தமிழன்.. ஜப்பானில் கத்தரிக்காய் விவசாயத்தில் அசத்தல்!
நாம் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். ஆனால், எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியா? தோல்வியா? என்பதை அறிந்துகொள்ள முடியும். முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால், வாழ்க்கையே ஓடிவிடும். இப்படி காலம் தாழ்த்தாமல் முடிவை எடுத்த ஒரு தமிழனுக்கு ஜப்பான் நாட்டில் வெற்றி கிடைத்துள்ளது.
இன்ஃபோசிஸ் (Infosys) கம்பெனியில் வேலை கிடைத்தால், லைப் செட்டில் என்று படிக்கும் மாணவர்களும், படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களும் நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், நம் நாட்டை பொறுத்தவரையில், நன்றாக படித்து மார்க் எடுக்க வேண்டும். படிப்பை முடித்த உடன் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக உள்ளது.

யாரும் சொந்தமாக தொழில் செய்ய சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தாலும் தைரியமாக தொழில் செய்ய முன்வருவதில்லை. கிடைத்த வேலையை வைத்து நன்றாக வாழ்க்கையை நடத்தவே ஆசைப்படுகிறோம். அதைக் குறைக்கூறவும் முடியாது. தொழில் தொடங்க அறிவுடன் சேர்த்து, பணம், நேரம், காலம், ஆதரவு ஆகியவையும் தேவை. ஆனால், பெரும்பாலான இளைஞர்களுக்கு இவை கிடைப்பதில்லை.
தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு தொழில் தொடங்கி லாபம் பார்க்கும் வரை காத்திருக்க ஒருபோதும் நேரம் கிடைக்காது என்பதே உண்மை. இருப்பினும் சில இளைஞர்கள் தைரியமாக முடிவெடுத்து வாழ்க்கையை வென்று காட்டி வருகிறார்கள். அப்படியொரு வெற்றியை கண்டவர்தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (27).
பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் சென்னையில் உள்ள இன்ஃபோசிஸ் (Infosys) கம்பெனியில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். மாதம் ரூ. 40,000 அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. இதனிடையே கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தே பணி புரிந்துள்ளார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், தனது சொந்த நிலத்தில் தந்தை விவசாயம் செய்வதை பார்த்து பூரிப்பு அடைந்தார்.
நாளடைவில் விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு முழு நேர விவசாயியாக மாறினார். இன்ஃபோசிஸ் வேலையை உதறித்தள்ள முடிவு எடுத்தார். விவசாயத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பி அதுதொடர்பான பணிகளில் ஈடுபட தொடங்கினார். அப்போது தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் உதவி உடன் ஜப்பானில் பாரம்பரியத்துடன் செய்யப்படும் கத்தரிக்காய் விவசாயம் பற்றி தெரிந்து கொண்டார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரிய திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு ஜப்பானில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்கள் விவசாயத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு பயற்சி அளித்து வருவது தெரிய வந்தது. அந்த வகையில் அதில் ஒரு நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு பயிற்சியில் சேர்ந்தார்.
அதன்பின் அந்த நிறுவனத்தின் உதவி உடனேயே 6 மாதங்களுக்கு முன்பு ஜப்பான் சென்றார். இப்போது அங்குள்ள கத்தரிக்காய் பண்ணையில் வெற்றிகரமான விவசாயியாக உள்ளார். இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்றவென்றால், இன்ஃபோசிஸ் கம்பெனியில் வாங்கிய ரூ.40,000 சம்பளத்தை விட கூடுதலாக ரூ.40,000 சேர்த்து சம்பாதித்து வருகிறார். அப்படி மாதம் வரும் ரூ.80,000 சம்பளத்தில் தன்னுடைய செலவு போக மீதம் உள்ள பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications