கீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா?
மதுரை, கீழடி கிராமத்தின் அருகில் உள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் அடுத்தகட்ட ஆராய்ச்சியை ஊரடங்கிற்குப் பின்பு துவங்கியுள்ளனர். இந்த அடுத்தகட்ட ஆராய்ச்சியில் பல புதிய பொருட்கள் கிடைத்துள்ளது. அதிலும் இம்முறை முதல் முறையாக அடையாளம் தெரியாத ஒரு வித்தியாசமான விலங்கின், எலும்புக் கூடு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி
மதுரை, சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் 6 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்குப் பின் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது. மணலூரில் மட்டும் ஆராய்ச்சி பணிகள் தாமதம் அடைந்தது.

ஊரடங்கிற்கு பின் மீண்டும் துவங்கிய ஆராய்ச்சி
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் 6 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி, ஊரடங்கு காரணமாக, மார்ச் 24 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக எந்தவித அகழாய்வு ஆராய்ச்சி பணியும் துவக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை அறிவித்த பின்னர் மீண்டும், அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் மே 20 ஆம் தேதி முதல் மறுபடியும் துவக்கப்பட்டுள்ளது.

மணலூரிலும் ஆய்வுப் பணிகள் ஆரம்பம்
தமிழக அரசின் உத்தரவுடன் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணிகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பித்தனர். மே 23 ஆம் தேதி முதல் முறையாக மணலூரிலும் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 27 ஆம் தேதி கொந்தகையில் உள்ள பகுதியில் அகழாய்வு பணிகள் மறுபடியும் துவக்கப்பட்டது. கீழடி, கொந்தகை மற்றும் அகரம் பகுதிகளில் இதுவரை எந்த புதிய மாதிரிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுடுமண்ணாலான உலை
ஆனால், மணலூரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வந்த ஆராய்ச்சியின் போது, அந்த பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஒரு அகழாய்வு குழியில் சுடுமண்ணாலான உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலை உலோகங்கள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யூகித்துள்ளனர். தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர் மேற்கொண்டு வருகின்றனர்.

60 செ.மீ ஆழம் கொண்ட அமைப்பு
சுடுமண்ணால் ஆன இந்த அமைப்பு 60 செ.மீ ஆழம் கொண்டது மற்றும் ஒரு மீட்டர் விட்டம் கொண்டது என்று தொல்பொருள் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தன் தெரிவித்திருக்கிறார். இது ஒரு பெரிய கட்டமைப்பின் பகுதியாக உள்ளதால், தற்போதைய அகழிக்கு அருகில் இன்னும் சில அகழிகள் தோண்டிய பின்னரே, இந்த பொருள் பற்றிய முழுமையான எந்தவொரு தகவலையும் உறுதிப்படத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2,600 ஆண்டுகள் பழமையான விலங்கின் எலும்பு படிமம்
இந்த நிலையில், இன்றைய அகழாய்வு ஆராய்ச்சியின் போது, மணலூரில் உள்ள அகழியில், அடையாளம் தெரியாத விலங்கின் எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கின் எலும்பு படிமம் பார்ப்பதற்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது, இது சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான எலும்பு படிமம் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இதுவரை காணப்படாத மாதிரி, புதிய வகை தோற்றத்தில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

யாழி விலங்கின் எழுப்பாக இருக்குமோ என சந்தேகம்?
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான விலங்கின் எலும்புக்கூடு ஒருவேளை 'யாழி'யாக இருக்கக் கூடுமோ என்று கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் அரண்மனையிலும், கோயில்களிலும் "யாழி" என்ற விலங்கின் தோற்றங்கள் மற்றும் சிலைகளை இப்பொழுதும் நாம் காணலாம். இது குதிரை உடம்பில் சிங்கத் தலை உள்ளது போன்று ஒரு வகையும், யானை முகமும் சிங்க உடலும் உள்ளது போன்றும் மற்றொரு வகையும் சிற்பங்களில் காணப்படுகிறது.

இதுவரை கிடைக்காத ஆதாரம்
இந்த யாழியின் உருவங்கள் பண்டையத் தமிழர்களின் சிற்பங்களிலும், வரைபடங்களிலும் இன்னும் சில அரண்மனை போன்ற முக்கிய இடங்களில் முத்திரைகளிலும் இந்த உருவத்தைப் பார்க்க முடிகிறது. இப்படி ஒரு உயிரினம் உண்மையில் இருந்ததா என்பதற்கான ஆதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கிடைத்துள்ள எலும்பு படிமம் ஒருவேளை யாழியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயாமாக இது நாய், குதிரை, ஆடு, மாட்டின் எலும்புக்கூடு இல்லை
இந்த சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இந்த எலும்புக்கூடு படிமம் வளர்ப்பு பிராணிகளான நாய், குதிரை, ஆடு, மாடு போன்று இல்லாமல், புதுவிதமாக இருப்பதால் தான் ஒருவேளை யாழியாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தையும், ஆச்சரியத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது, ஆய்வின் முடிவில் தான் இது எந்த விலங்கின் எலும்புக்கூடு என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications