சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்
சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறரை விம்ரசிப்பதை தாண்டி அவதூறு
சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவது என்பது ஒப்புக் கொள்ளக்கூடியது என்றாலும் அது பிறரை விமர்சிக்கும் விதமாக இருக்கிறது என்பதையும் தாண்டி ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சைபர் கிரைம் துறை கண்காணிப்பு
சமூகவலைதளங்கள் குறித்து பல்வேறு புகார்களும், வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. அதேபோல் சைபர் கிரைம் துறையும் குற்றம் செய்பவர்களை கண்காணித்துக் கொண்டேதான் வருகின்றன.

நீதிபதிக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஆபாச கருத்து
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி அமர்வில் முன்னதாக விசாரணைக்கு வந்தது அப்போது, சமூக வலைதளங்களில் ஆபாச, அவதூறு கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
இது போன்ற போக்குகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என கூறினார். அப்படி இல்லையென்றால், தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது எனவும் காட்டமாக தெரிவித்தார்.

ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்கள் பதிவு
நீதிபதியின் உத்தரவையடுத்து, சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

மார்ச் 30 ஆம் தேதி விசாரணை
இதற்கான நிபுணத்துவத்தை சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, மார்ச் 30 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications








