குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!
கொரோனா ஊரடங்கு காலத்தில் 5.5 லட்சம் பிரியாணி பொட்டலங்கள், மூன்றரை லட்சம் நூடுல்ஸ் பொட்டலங்களை பயனர்கள் ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டதாக ஸ்விகி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளில் பெருமளவு தாக்கம்
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுத்து வருகிறது. இதில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்
கொரோனா ஊரடங்கு ஆரம்பத்தில் கடினமாக அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் தளர்வுகள் விதிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் பல்வேறு வகை தொழில்களும் விதிமுறைகளோடு பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆன்லைன் டெலிவரிகளை பாதுகாப்போடு மேற்கொள்ள அனுமதி
கொரோனாவை கட்டுபடுத்த ஊரடங்கானது அதன் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தளர்வுகளுக்கு ஏற்ப ஆன்லைன் டெலிவரிகளை பாதுகாப்போடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு
கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் தொடர்ந்து அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆன்லைன் உணவு டெலிவரி
தளர்வுகளுக்கு ஏற்ப ஆன்லைன் உணவு டெலிவரி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதோடு ஹோட்டல்களில் உள்ள உணவு தயாரிப்பாளர்கள், பார்செல் செய்பவர்கள், டெலிவரி பாய்ஸ் என அனைவருக்கும் தினசரி காலை காய்ச்சல் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஸ்விகி தரப்பில் அறிக்கை
இந்த நிலையில் ஸ்விகி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. பொதுவாக இந்தியர்களுக்கு பிரியாணி என்றால் தனி பிரியம்தான் என்றே கூறலாம். அதற்கேற்ப பிரியாணியின் ருசியும் தனித்தே இருக்கும். பிரியாணியும் சைவம் அசைவும் என இருபிரிவுகளில் பல்வேறு வகைகளில் விற்கப்படுகிறது.

5.5 லட்சம் பிரியாணி பொட்டலங்கள்
ஸ்விகி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 5.5 லட்சம் பிரியாணி பொட்டலங்களை பயனர்கள் ஆர்டெர் செய்து பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது. அதோடு சுமார் 323 மில்லியன் கிலோ வெங்காயமும், 5.6 கோடி கிலோ வாழைப்பழங்களையும் ஸ்விகி மூலம் பயனர்கள் ஆர்டர் செய்து பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆயிரம் கிருமி நாசினிகள்
குறிப்பாக தினசரி சரியாக இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் இரவு உணவுகளுக்கு ஆன்லைன் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 75 ஆயிரம் கிருமி நாசினிகள், 47 ஆயிரம் முகக் கவசங்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதோடு 1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகள், 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்த நாள் கேக்குகளை ஸ்விகி ஆர்டர் மூலம் பயனர்கள் பெற்றுள்ளனர் எனவும் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

40 மில்லியன் ஆர்டர்கள்
இந்தியாவின் ஊரடங்கு காலத்தின்போது உணவு, மளிகை சாமான்கள், மருந்துகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் என 40 மில்லியன் ஆர்டர்களை வழங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரியாணியைத் தொடர்ந்து பட்டர்நான் மற்றும் மசாலா தோசைக்கான ஆர்டர்கள் அதிகப்படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications