இனி வீட்டிலேயே சமைங்க பாஸ்.. Swiggy கஸ்டமர்களுக்கு ஷாக் கொடுக்கும் புதிய கட்டணம்!
நீங்கள் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளராக இருந்தால், இனி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுவிட வேண்டியது தான் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு செய்தி வந்துள்ளது. பெரும்பாலானோர் ஃபுட் ஆர்டர் செய்யும் ஸ்விகியில் புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் வீட்டில் சமைப்பதற்கு தேவை இருப்பதில்லை. நமக்கு பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்து விடுகிறது. இப்படி ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்வது மூலம் சமைப்பதற்கான நேரமும், கடைக்கு சென்று வாங்குவதற்கான நேரமும் மிச்சமாவதால் பலரும் அதையே விரும்புகின்றனர்.

இந்தியாவில் ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) ஆகிய மூன்று ஆன்லைன் ஃபுட் ஆர்டர் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருப்பதால், இந்த நிறுவனங்களிலேயே அதிக ஆர்டர்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஸ்விகியில் மட்டும் ஒரு நாளைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகிறது.
இதுமட்டுமல்லாமல் ஸ்விகி நிறுவனம், இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) என்னும் பெயரில் தனியாக ஆன்லைனில் மளிகை பொருள்களையும் டெலிவரி செய்து வருகிறது. இவற்றில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறைக்கூறி வந்த நிலையில், இப்போது பிளாட்ஃபார்ம் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக 2 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஸ்விகியில் ஃபுட் ஆர்டர் செய்யும்போது, நாம் தேர்வு செய்யும் ஹோட்டலில் உணவுக்காக விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஃபுட் டெலிவரி நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி மற்றும் டெலிவரி கட்டணம் என மூன்று கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இதில் டெலிவரி கட்டணம் குறைந்தபட்சம் 28 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
அதாவது நீங்கள் 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் ஹோட்டலில் ஃபுட் ஆர்டர் செய்தால், ரூ.28 கட்டணமாக விதிக்கப்படும். அதுவே தூரம் 5 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் போது ரூ.56 கட்டணமாக விதிக்கப்படும். இந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாகவும், குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், ஸ்விகி நிறுவனம் பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform Fee) என்ற பெயரில் கூடுதலாக 2 ரூபாயை வசூலிக்க தொடங்கி உள்ளது. இதனால் ஸ்விகி வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து ஸ்விகி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி கூறுகையில், ஃபுட் டெலிவரி செய்யும் நிறுவனங்களிடையே மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
வருவாய் குறைந்து, செலவு அதிகரித்துள்ளது. இதனை ஈடுசெய்ய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை விதித்துள்ளோம். இந்த கட்டணம் அதிகப்படியான ஃபுட் டெலிவரி நடக்கும் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விகி இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த புதிய 2 ரூபாய் கட்டணம் சிறியதாக தோன்றினாலும், ஒரு நாளைக்கு 15 லட்சம் ஆர்டர்களை எடுக்கும் ஸ்விக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். இதன்மூலம் மட்டுமே ஆண்டு வருமானம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைக்கும். ஏற்கனவே ஸ்விகியின் ஆண்டு வருமானம் ரூ. 5,700 கோடியாக உள்ளது. இந்த நேரத்தில் புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்விகியின் போட்டி நிறுவனமான சோமேட்டோவிலும் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications