தமிழனின் தன்னடக்கம்.. Google-ல காலடி எடுத்து வச்சி 20 வருஷம்.. சுந்தர் பிச்சை சொன்ன அந்த ஒரு வார்த்தை!
கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் இணைந்து 20 வருடங்கள் ஆனதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தையும் கூறியுள்ளார்.

கடந்த 2004 எப்ரல் 26-ம் தேதி கூகுள் நிறுவனத்தில் எனது முதல் பணி நாள். அப்போது முதல் நிறைய மாறுதல்கள் வந்து விட்டன. அதாவது தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, என் தலைமுடி என நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. ஆனால் மாறாதது ஒன்று தான், அது இந்த அற்புதமான நிறுவனத்தில் வேலை செய்வதில் கிடைக்கும் த்ரில் ஒன்று தான். 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நான் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன் என்றார் சுந்தர் பிச்சை.
சுந்தர் பிச்சை நன்றாகப் படித்து தனது திறமை மூலம் இந்த கூகுள் சிஇஒ பதவிக்கு வந்துள்ளார். ஆனாலும் அவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட முக்கியமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில், ஒரே சமயத்தில் தான் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ரகசியத்தைச் சொல்லி ஆச்சரியப்பட வைத்தார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் 20 போன்களை பயன்படுத்துவதற்கான ரகசியம் என்னவென்றால், பணி நிமித்தமாக இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது என்று கூறினார். பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் இப்படிச் செயல்பட்டால்தான், பொதுமக்கள் விரும்பும் புத்தம் புதிய அம்சங்களைக் கூகுள் நிறுவனத்தால் கொடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். பின்பு இந்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்தும் சுந்தர் பிச்சை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குழந்தைகள் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதைக் கண்டிக்காமல்,கட்டுப்படுத்தும் விதத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது குழந்தைகள் எவ்வளவு நேரம் செல்போன் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக் குழந்தைகள் அவர்கள் போக்கில் விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்பு இந்த ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய சுந்தர் பிச்சை, மனிதர்கள் உருவாக்கிய மிக முக்கியமான தொழில்நுட்பமாக இந்த ஏஐ இருக்கும். குறிப்பாக நெருப்பும், மின்சாரமும் மனித வாழ்வில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோன்று இந்த ஏஐ தொழில்நுட்பம் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
photo courtesy: m.rediff.com


Click it and Unblock the Notifications








