இப்போ வந்து சொல்றீங்க.. Aditya L1-ஐ அனுப்பியாச்சே.. ஒரே நேரத்துல 40 சாட்டிலைட்களை பலி வாங்கிய சூரிய புயல்!
சூரியனையும், விண்வெளி வானிலையையும் ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் சோலார் மிஷன் (India's First Solar Mission) ஆன ஆதித்யா எல்1 (Aditya L1) செயற்கைகோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) வெற்றிகரமாக இன்று (செப்.2) விண்ணில் செலுத்தியது.
எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சாமானிய மக்கள் வேண்டுமென்றால் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆனால் உண்மை என்னவென்றால்.. இப்போது தான் எல்லாமே ஆரம்பிக்கிறது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவிற்கு மிக நெருக்கமாக சென்றது போலவோ, தென் துருவத்தில் தரை இறங்கியது போலவோ.. ஆதித்யா எல்1 மிஷன் நிச்சயம் இருக்கப்போவதில்லை!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர்கள் (150 Million Kms) ஆகும். ஆனால் ஆதித்யா எல்1 ஆனது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (1.5 Milliom Kms) தூரத்திற்கு மட்டுமே பயணிக்க உள்ளது. அதாவது ஆதித்யா எல்1 ஆனது அதன் இலக்கை அடைந்ததும், அதற்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரமானது 148.5 மில்லியன் கிலோமீட்டராக (148.5 Million Kms) இருக்கும்.
ஒப்பீட்டளவில் இது மிகவும் சிறியதாக தெரியும், இந்த இலக்கை அடையவே இஸ்ரோவின் ஆதித்யா எல்1-க்கு சுமார் 109 நாட்கள் ஆகுமென்று கணக்கிடப்பட்டுள்ளது. எதற்காக இந்த அளவிலான தூரம்? என்கிற கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள். ஏனென்றால் சூரியனின் சக்தி என்ன என்பதை நாம் அனைவருமே நன்கு அறிவோம்!
அதிலும் குறிப்பாக "சூரிய புயலால் ஒரே நேரத்தில் 40 செயற்கைகோள் அழிக்கப்பட்ட விண்வெளி நிகழ்வை" பற்றி அறிந்த எவருமே ஆதித்யா எல்1 செயற்கைகோளுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். உடனே.. "என்னது சூரிய புயலா? இப்போ வந்து சொல்றீங்க.. ஆதித்யா எல்1-ஐ அனுப்பியாச்சே!" என்று ஷாக் ஆக வேண்டாம்!
ஏனென்றால் மிகவும் ஆபத்தான சூரிய புயலையும் (Solar Storm) சேர்த்தே ஆதித்யா எல்1 ஆய்வு செய்ய உள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனமானது தனது 49 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை (Starlink Satellites) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவைகளில் 40 செயற்கைகோள்களை புவி காந்தப்புயலுக்கு பலி கொடுத்தது.
குறிப்பிட்ட புவி காந்தப்புயல் (Geomagnetic storm) ஆனது சூரியனில் இருந்து வெளியேறிய எம்1-கிளாஸ் சூரிய எரிப்பு (M1-class solar flare) மூலம் உருவான கரோனல் மாஸ் எஜெக்ஷனின் (Coronal mass ejection) விளைவாகும், இது சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது; விண்வெளியின் வெற்றிடத்திற்கும் பூமி உள்ளிட்ட உள் கிரகங்களை நோக்கி பாய்ந்தது.
இதெல்லாம் எப்படி நடக்கிறது? சூரியக் காற்று மற்றும் சூரிய புயல்களை ஏற்படுத்துவதில் கரோனல் மாஸ் எஜெக்ஷனின் (CME) விளைவுகள் என்ன என்பதை பற்றியும் கூட ஆதித்யா எல்-1 ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பிட்ட தூரத்தை எட்டிய பிறகு ஆதித்யா எல்1 ஆனது தன்னுள் கொண்டுள்ள ஏழு பேலோடுகளை பயன்படுத்தி சூரியனை ஆய்வு செய்யும்; தரவுகளை சேகரிக்கும்.
சூரியனையும், அதன் கரோனல் மாஸ் எஜெக்ஷனையும், அதன் விளைவாக ஏற்படும் விண்வெளி நிகழ்வுகளை ஆராய்வதும், புரிந்துகொள்வதும் மிகவும் அவசியமாகும். ஏனெனில் இவைகள் விண்வெளியில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் "உலகிற்கே முன்னோடியான சில கண்டுபிடிப்புகளை" இஸ்ரோவின் ஆதித்யா எல்1 நிகழ்த்தும் என்று நம்புவோம்!


Click it and Unblock the Notifications








