"எந்திரன்" கதையே நமக்கு கிளைமாக்ஸ்.. ஒரு நாள் மனிதர்களை AI கட்டுப்படுத்தும்.. எச்சரிக்கும் எமட் மோஸ்டாக்!
மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோட் மனித குலத்துக்கே எதிரியாகும் கதையை பெரும்பாலான சைன்ஸ் பிக்ஷன் படங்களில் பார்த்திருப்போம். எப்போது, நமது உதவி ரோபோட்டுக்கு தேவைப்படவில்லையே, அப்போதே நமக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது என்பதை மனிதகுலம் முன்கூட்டியே அறிந்திருக்கிறது. இருப்பினும், ஏஐ (AI) தொழில்நுட்பத்தை வளர்த்து வருவது வேடிக்கயாக தோன்றலாம்.
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டுவரும் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணுகின்றன. இதனால், அதிவேகமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. மிகப்பெரும் நிறுவனங்களே, செயற்கை நுண்ணறிவை ஆதரிப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் அது பரவலாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவானது, தொழில்நுட்பத்துறையில் மட்டும் மாற்றத்தை கொண்டுவராது என்பதே உண்மை. இது, அனைத்து துறைகளிலும் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எளிதில் ஆக்கிரமிப்பை தொடங்கிவிட வாய்ப்புள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் செயற்கை நுண்ணறிவின் உதவியில்லாமல், எந்த தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளையும் மக்களால் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
இதனால், செயற்கை நுண்ணறிவின் ஆக்கிரமிப்பையும், ஆபத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உலக நாடுகள் விதிகளை உருவாக்க வேண்டும் என்று மனிதவள ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அதனடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை வகுக்கும் நோக்குடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவசர கூட்டத்தை நடத்தினார்.
இப்படி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் செயற்றை நுண்ணறிவு ஒரு நாள் மனித குலத்தை கட்டுப்படுத்த விரும்பும் என்று ஸ்டெபிலிட்டி ஏஐ (Stability AI) நிறுவனர் எமட் மோஸ்டாக் (Emad Mostaque) எச்சரித்துள்ளார். அண்மையில் எமட் மோஸ்டாக், பிபிசி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம், செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த முடியாமல் போனால் என்ன நடக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த எமட் மோஸ்டாக், "செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது என்பதை நாம் மறுக்க முடியாது. நம்மால் செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த முடியாமல் போனால், அதன் வளர்ச்சி மனிதர்களை விட வேகமாக இருக்கும். வரலாற்றில் மோசமான காலத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள் மனிதர்களை கட்டுப்படுத்த விரும்பும்.
மனிதர்களின் செயல்பாடுகள் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. குட் பை என்று சொல்லிவிட்டு தனிச்சையாக கூட செயல்படலாம். அப்படியொரு நாள் நிச்சயம் நடக்கும். இதுபோன்று மட்டுமல்லாமல், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப புரட்சி காரணமாக அதிக நெருக்கடி ஏற்படும்.
மனித வேலைவாய்ப்புகள் காணாமல்போகும். நாம் மிகவும் பெரிதாக கருதும் வேலைகள் சொற்பமாக மாறிவிடும். இந்த நேரத்தில் நமக்கு கொள்கைகள் வேண்டும். மிகப்பெரும் அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து கவலை கொள்கின்றன. விரைவில் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








