செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?
பல பிரமிப்பான உண்மைகளையும், பல நம்ப முடியாத மர்மங்களையும் நமது பிரபஞ்சம் கொண்டுள்ளது. அதிலும் நமது பூமி கிரகத்திற்கு அருகில் உள்ள சிவப்பு நிற கிரகமான செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் அறிந்திடாத பல உண்மைகளும், பல மர்மங்களும் ஒளிந்துள்ளன. இதை ஆராய்ச்சி செய்து அவற்றை அறிந்துகொள்வதற்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான செவ்வாய் கிரகம் பற்றிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கால்கள் படுவதற்கு இன்னும் சில காலம் தான் உள்ளதா?
மனித வாழ்விற்கான மாற்று இடமாகக் கருதப்படும் நமது அண்டை கிரகமான செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனின் பார்வைப்பட்டு சில பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கால்கள் படுவதற்கும், முதல் மனித காலனி துவங்கப்படுவதற்கும் இன்னும் சில பல ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல கட்ட ஆராய்ச்சிகளைச் செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் சமீபத்தில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்துள்ளது.

நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் கண்டறிந்த புதிய தகவல்
நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் (Perseverance rover) மூலம் செவ்வாய் கிரகத்தில் கைப்பற்றப்பட்ட ஒலிகளின் பகுப்பாய்வு நம்ப முடியாத புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. நமது அண்டை கிரகமான செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகத்தை இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 53 வது சந்திர மற்றும் கிரக அறிவியல் மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டபடி, சிவப்பு கிரகத்தில் ஒலியின் வேகம் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழுவால் கண்டறியப்பட்டது.

ஏலியன் கிரகத்தின் முதல் ஒலி.. செவ்வாய் ஏலியன் கிரகமா? எப்படி?
செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. அப்போதிலிருந்து, இந்த ரோவரின் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் மைக்ரோஃபோன் மூலம் கிரகங்களின் விவரங்களைப் படம்பிடித்து வருகிறது. இது ஒரு ஏலியன் கிரகத்தின் முதல் ஒலியை பூமிவாசிகள் கேட்க அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பூமியைத் தவிர்த்து நமது பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழாத மற்ற கிரகங்கள் அனைத்துமே ஏலியன் கிரகமாகத் தான் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலியன்கள் இருக்கும் கிரகம் தான், ஏலியன் கிரகம் என்பது தவறான புரிதல்.

பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் மைக்ரோஃபோன் செவ்வாய் கிரகத்தில் என்ன வெளிப்படுத்தியது?
அந்த ஒலிகள் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஏதாவது பயனுள்ளவற்றை வெளிப்படுத்துகின்றனவா என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளத் துவங்கினர். லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த பாப்டிஸ்ட் சைட் அவர்கள் ஒலியின் வேகத்தை அளப்பதன் மூலம் புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தனர். "பெர்ஸெவரன்ஸிலிருந்து வெளிப்படும் லேசர் வெடிப்புகளிலிருந்து ஒலிகள் ரோவரின் மைக்ரோஃபோனுக்குத் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தை" அளவிடத் துவங்கினர்.

பூமியில் ஒலியின் வேகம் என்ன? செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் என்ன?
செவ்வாய் கிரகத்தில் ஒலி வினாடிக்கு சுமார் 240 மீட்டர் வேகத்தில் செல்வதாக விஞ்ஞானிகள் அந்த லேசர் வெடிப்பு ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். மாறாக, பூமியில் காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் அல்லது 2.9 வினாடிகளில் ஒரு கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வெவ்வேறு அதிர்வெண்கள் வெவ்வேறு வேகத்தில் பயணிப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். 400 ஹெர்ட்ஸுக்கு மேல், ஒலியின் வேகம் சுமார் 10 மீட்டர் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் பேச்சு சிதைந்துவிடுமா?
இதன் பொருள் என்ன தெரியுமா? உதாரணத்திற்கு, இரண்டு பேர் செவ்வாய் கிரகத்தில் உரையாடினால், அது மிகவும் கடினமாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏனென்றால், செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் பூமியை விடக் குறைவாக இருப்பதனால், மனிதர்களின் பேச்சின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு நேரங்களில் கேட்போரைச் சென்றடையும். இதனால், மனிதனின் பேச்சு செவ்வாய் கிரகத்தில் பூமி போல் இல்லாமல் சிதைந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையில் ஒலியின் வேகத்தை மாற்றுகிறதா?
இதுமட்டுமின்றி, ஒலி வேகம் பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி, செவ்வாய் கிரகம் வெப்பநிலையில் விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒவ்வொரு முறையும் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் அதன் லேசரைச் சுடும் போது ஒலியின் வேகத்தை மதிப்பிடுவதன் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் போன்ற வேற்றுக்கிரக கிரகத்தை புரிந்து கொள்ள மைக்ரோஃபோன் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு, செவ்வாய் கிரகம் பற்றிய ஒரு புதிய புரிதலை உருவாகியுள்ளது.

நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர்
செவ்வாயில் உயிர் வாழச் சாத்தியம் உள்ளதா? இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் எதுவும் உள்ளதா? உயிர்களின் அடையாளத்தைக் காண்பிக்கும் வகையில் ஆதாரங்களை நாசா சேகரித்து வருகிறது. இதற்காக, தனிச் சிறப்பான செயற்கைக்கோள் மற்றும் ஆர்பிட்டரை நாசா செவ்வாய் கிரகத்தில் நிறுவியுள்ளது. கடந்த, 2005 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் (MRO - Mars Reconnaissance Orbiter) இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் புதிய ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததா?
நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் (MRO - Mars Reconnaissance Orbiter) இப்போது கண்டுபிடித்துள்ள மிக முக்கியமான தடையும் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான உறுதியான அடையாளங்களை நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் எதிர்கால ஆராய்ச்சிகளுக்குக் கூடுதல் தகவலை வழங்கியுள்ளது. முந்தைய ஆய்வுகளின் முடிவுகளை இந்த கண்டுபிடிப்பு மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications