ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை.!
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட் நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த பால்கன்-9 ராக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. மேலும் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், புவி வட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும். முதல்கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. இது அட்டலாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

பின்பு ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கை கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதில் அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியானவை 133 செயற்கைக் கோள்கள் ஆகும். மேலும் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் ஆகும்.

குறிப்பாக 12 ஆயிரம் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் சாட்டிலைட் இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ்
அனுப்பி உள்ளது.

இதேபோல் இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும் 2017-ம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications