எனக்கே விபூதி அடிக்கிறீயா.. Google-க்கு 32 மில்லியன் டாலர் அபராதம் விதித்த தென் கொரியா.. இது 4வது சம்பவம்!
உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு (Google) தென் கொரிய அரசாங்கம் ஒரு பெரும் தொகையை அபராதம் விதித்துள்ள சம்பவம் தொழில்நுட் நிறுவனங்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் விதிக்கும் அளவிற்கு கூகுள் அப்படி என்ன செய்தது? என்ன நடந்தது? இதோ விவரங்கள்:
கேஃஎப்டிசி (KFTC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென் கொரியாவின் ஃபேர் ட்ரேட் கமிஷன் (South Korea's Fair Trade Commission) கூகுள் நிறுவனத்திற்கு 42.1 பில்லியன் வான் (42.1 Billion Won) அதாவது 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (32 Million Dollar) அபராதம் விதித்துள்ளது.

கூகுளுக்கு ஏன் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள ஒன்ஸ்டோர் (OneStore) என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் கூகுள் என்ன தவறு செய்ததாக தென் கொரியா குற்றம் சாட்டுகிறது? கூகுள் உண்மையிலேயே என்ன செய்தது? என்பதை பற்றியெல்லாம் உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.
ஒன்ஸ்டோர் என்பது கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) எதிராக உருவாக்கப்பட்ட ஒரு லோக்கல் ரிவல் ஆப் ஸ்டோர் (Local Rival App Store) ஆகும். இது தென் கொரியாவின் 3 முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான எஸ்கே டெலிகாம், கேடி மற்றும் எல்ஜி பிளஸ் மற்றும் இண்டர்நெட் நிறுவனமான நேவரின் (Naver) கூட்டணியில், கடந்த 2016 இல் ஒன்ஸ்டோர் தொடங்கப்பட்டது.
ஆப்ஸ் சந்தையில் தனது ஆதிக்கத்திற்கு சவால் விடுவதை நோக்கமாக கொண்டு வெளியான ஒன்ஸ்டோர்-ஐ பார்த்து கொண்டு கூகுள் சும்மா இருக்குமா? தென் கொரியாவின் ஒன்ஸ்டோர் உருவானவுடனேயே, ஆப்களை உருவாக்கும் டெவெலப்பர்கள் ஒன்ஸ்டோரை ஒரு தளமாக தேர்வு செய்தால், அவர்களின் தயாரிப்புகள் பிளே ஸ்டோரில் இடம்பெறாது என்று அறிவித்து அதிரடி காட்டியது.
அதுமட்டுமா? தென் கொரியாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் நுழைவதற்கான உதவிகளை வழங்குவோம் என்று கூறி தென் கொரிய டெவலப்பர்களையும் தன் வசம் ஈர்த்தது. கூகுளின் இந்த வியாபார தந்திரங்கள் ஒன்ஸ்டோரின் சந்தைப் பங்கை, 2016 இல் 15 - 20% இலிருந்து 2018 இல் 5 - 10% ஆக குறைய வழிவகுத்தது, அதே நேரத்தில் கூகுளின் பங்கு 80 - 85% இலிருந்து 90 - 95% ஆக உயர்ந்தது.
இந்நிலைப்பாட்டில் தான், ஒன்ஸ்டோருக்கு எதிராக "போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகளில்" (Anticompetitive Practices) ஈடுபடுவதாக கூகுளுக்கு 32 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கேஎஃப்டிசியின் இந்த அபராதம் ஆப்ஸ் சந்தையில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும், கூகுள் தனது ஆதிக்க நிலையை மேம்படுத்துவதை தடுப்பதற்குமான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் கேஎஃப்டிசியின் கூற்றை, கூகுள் மறுக்கிறது. இது தொடர்பாக பேசிய கூகுளின் செய்தித் தொடர்பாளர் எங்கள் நிறுவனம் விசாரணைக்கு உறுதியாக ஒத்துழைத்துள்ளது என்றும், நாங்கள் சட்டத்தை மீறவில்லை என்று நம்புவதாகவும் கூறி உள்ளார். தென் கொரியாவின் இந்த அபராத நடவடிக்கையானது கூகுளுக்கு எதிரான அந்நாட்டின் மூன்றாவது மோதலாகும் என்பதும் இங்கே குறிபிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








