இந்தியாவில் அதிநவீன ஆகாஷ் ஏவுகணை சோதனை: வெற்றி.!
டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனை கொண்ட புதிய ஆகாஷ் ஏவுகணையை
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

மேலும் இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒடிஸா கடற்கரைப் பகுதியில் இருக்கும் ஒருகிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

குறிப்பாக கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத் தொடர்பு அமைப்பு என அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பரிசோதனைக்கு பின்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்த தகவலின்படி, இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது என்று உறுதிசெய்யப்பட்டது.

அதேபோல் இந்த புதிய ஏவுகணையை இந்திய விமானப் படையில் சேர்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த அதிநவீன ஆகாஷ் ஏவுகணை ஆனது நிலத்தில் இருந்து 60 கி.மீ தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறமை கொண்டது.

மேலும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த அதிநவீன ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வடிவமைத்துள்ளது. எனவே டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும், தயாரிப்பில் உதவிகரமாக இருந்த பிற நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதேபோல் கடந்த மாதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ அமைப்பு.

குறிப்பாக 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கின என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த பினாகா ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications