ஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்க மொபைல் புளூடூத் ஆனில் இருந்தால்... ஜோலி முடிஞ்சது!
கம்ப்யூட்டருக்கு இணையான வசதிகளுடன் இப்போது ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதே அளவுக்கு, ஸ்மார்ட்போனை ஹேக் செய்வதற்கும், தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. சில எளிய வழிகளை கையாண்டால், இந்த பிரச்னைகளிலிருந்து தற்காத்து கொள்ள முடியும்.

ஸ்க்ரீன் லாக்
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இப்போது பேட்டர் லாக் அல்லது ஸ்க்ரீன் லாக் வசதி கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சங்கேத குறியீடு அடிப்படையில் திரையை திறக்கும் இந்த வசதியே சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தி விடும். தொடர்ந்து ஒரே சங்கேத குறியீட்டை பயன்படுத்தும்போது, அது திரையில் பதிந்து விடுவதற்கான வாய்ப்புண்டு. ஒருவேளை, மொபைல் திருடுபோனால், இந்த தடத்தை வைத்து எளிதாக திறப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.

இதை செய்யுங்க
அடிக்கடி திரையை சுத்தம் செய்வது எளிய வழி. அடுத்து, பேட்டர்ன் லாக் சங்கேத குறியீட்டு முறையை அடிக்கடி மாற்றுவதும் பலன் தரும். இல்லையெனில், பின் கோடு முறையை பின்பற்றுவது இந்த பிரச்னையை தவிர்க்கும் வழி. நண்பர்கள் உள்பட பிறர் எளிதில் யூகிக்க முடியாத, உடனடியாக நினைவூட்டும் விதத்தில் பின்கோடு பயன்படுத்துங்கள்.

என்க்ரிப்ட் சாஃப்ட்வேர்
ஸ்மார்ட்போனின் திரைக்கு ஸ்க்ரீன் லாக் போட்டு வைத்திருந்தாலும், கம்ப்யூட்டரில் இணைத்தோ அல்லது மைக்ரோ எஸ்டி காரை எடுத்து, அதிலிருக்கும் தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, முக்கியமான தகவல்கள் இருந்தால், அதனை பாதுகாத்து வைப்பது அவசியம். இதற்கு சில நம்பகமான அல்லது கட்டணத்துடன் கூடிய என்க்ரிப்ட் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பயன்படுத்துவது பலன் தரும். மேலும், உங்களது ஸ்மார்ட்போனில் பதிவாகும் தகவல்களை தானியங்கி முறையில் பேக்கப் செய்து வைப்பதும் நல்லது.

வயர்லெஸ் இணைப்பு
மொபைல் வயர்லெஸ் அல்லது ஹாட்ஸ்பாட் பயன்பத்தும்போது பிற நெட்வொர்க்கில் தானியங்கி முறையில் இணைந்து கொள்வதற்கான ஆப்ஷனை அணைத்து வைப்பது அவசியம். மேலும், ஹாட்ஸ்பாட், மொபைல் வயர்லெஸ் ஆப்ஷன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அறிமுகம் இல்லாத இலவச சேவை நெட்வொர்க் அல்லது நிறுவனங்களின் ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

புளுடூத் கவனம்
புளூடூத் வசதியானது 10 மீட்டருக்குள் செயல்படும் என்றாலும், இதிலும் ஒரு வில்லங்கம் உள்ளது. ஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்களது ஸ்மார்ட்போனின் புளூடூத் ஆன் செய்திருந்தால், ஜோலி முடிஞ்சது என்றே அர்த்தம் கொள்ளலாம். அவர்கள் உங்கள் அனுமதி இல்லாமலேயே புளூடூத்தை பயன்படுத்தி, தகவல்களை திருடும் வாய்ப்புள்ளது. பயன்பாடு இல்லாதபோது புளூடூத்தை அணைத்து வையுங்கள். அறிமுகம் இல்லாத நபர்கள் புளூடூத் வழியாக பேரிங் செய்ய முயன்றால் அனுமதிக்க வேண்டாம்.

டவுன்லோடு செய்யும்போது...
பல புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும், மொபைல் அப்ளிகேஷன்கள் தினமும் அறிமுகமாகி வருகின்றன. அதில், சில மால்வேர் எனப்படும் தகவல் திருட்டு அல்லது கண்காணிப்பு சாஃப்ட்வேரும் சகஜமாக புழங்க துவங்கியுள்ளன. டவுன்லோடு செய்யும்போது இருப்பிடம் உள்ளிட்ட உங்களது தனியுரிமை தொடர்பான தகவல்களை அது கேட்கக்கூடும். அதனை கவனமாக ஆய்ந்து பின்னர் ஒகே கொடுப்பது அவசியம்.

பிரவுசிங் டிரிக்
பிரவுசரில் புதிய இணையதளங்களுக்கு செல்லும்போது அல்லது ஷாப்பிங் செய்யும்போது உங்களது மொபைல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்டவற்றை கண்ணை மூடிக் கொண்டு வழங்க வேண்டாம். அதனை வைத்தே உங்களது போனில் உள்ள தகவல்கள் அல்லது வேறு க்ளவுட் சர்வீஸ் இருக்கும் உங்களது முக்கிய தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது. https என்ற இணையதள பக்கங்கள் அதிக பாதுகாப்பானதாக நம்பலாம்.

ஜியோ டேக்கிங்
ஜியோ டேக்கிங் வசதியை அணைத்து வைப்பதும் அவசியம். அறிமுகம் இல்லாதவர்கள் கூட உங்களது இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கும், சமூக ஊடகங்கள் உங்களது விபரம் மற்றும் படங்களை குறிப்பிட்ட சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி பார்க்க முடியும். மேலும், நீங்கள் எந்ந இடத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதையும் துல்லியமாக அவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர்
உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து தகவல்களை பாதுகாப்பதற்கு ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து பதிவு செய்து வைப்பது நலம். அறிமுகம் இல்லாத இலவச ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டாம். நம்பகமான, கட்டணத்துடன் கூடிய சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவது அவசியம்.

இதுவும் பலன் தரும்
உங்களது ஸ்மார்ட்ஃபோனை கம்ப்யூட்டர் உள்ளிட்ட உங்களது பிற சாதனங்களுடன் இணைத்து வைப்பது அவசியம். ஒருவேளை, உங்களது ஸ்மார்ட்போன் திருடுபோனால், எந்த இடத்தில் இருக்கிறது என்பது இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்கவும், துல்லியமாக அறிந்து கொள்ளவும் முடியும். அவ்வப்போது அப்டேட்டுகளை சரிவர பதிவு செய்வதும் அவசியம்.

நோ ப்ராப்ளம்...
உங்களது ஸ்மார்ட்ஃபோன் திருடு போகும்பட்சத்தில், அதிலுள்ள முக்கிய தகவல்களை இருந்த இடத்தில் இருந்தே அழித்துவிட முடியும். ரிமோட் வைப் செயலிகளை பயன்படுத்தி, இந்த வசதியை பெற முடியும். கட்டணத்துடன் கூடிய செயலிகளை பயன்படுத்தும்போது முழுமையான பாதுகாப்பை பெற முடியும்.


Click it and Unblock the Notifications