புடிச்சு உள்ள போடுங்க சார்.. எங்கள் உறவை பாதிப்பது இதுதான்! 88% இந்திய தம்பதிகள் புலம்பல்.!
இந்தியாவில் திருமணமான தம்பதிகளிடம் Smartphone-களின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. Vivo நிறுவனம் CyberMedia Research (CMR) உடன் இணைந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 10 ஜோடிகளில் 8 பேர் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கின்றனர்.

பிரதானமாக இருக்கும் Smartphone
பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் காலத்தோடு ஓடுவது கட்டாயமாக இருக்கிறது. அரசு ஆவணம் மாற்றம் முதல் வங்கிக் கணக்கு தகவல் வரை அனைத்துக்கும் பிரதானமாக இருப்பது ஸ்மார்ட்போன் தான். ஸ்மார்ட்போனில் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமைகளும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

"காலம் பொன் போன்றது"
ஏதோ ஒரு நோக்கத்துக்காக ஸ்மார்ட்போனை எடுத்து எதுஎதற்குள்ளயோ சென்று காலத்தை தொலைப்பவர்கள் ஏராளம். காலம் பொன் போன்றது ஆனால் இந்த காலத்தை ஸ்மார்ட்போனில் வீண் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இதே ஸ்மார்ட்போனில் தான் பல்வேறு முக்கிய தகவலையும் படித்தும் பார்த்தும் அறிந்துக் கொள்கிறோம். இதில் தேவையானவற்றை வடிகட்டி எடுத்துக் கொண்டால் சிறப்பு. ஆனால் இதை பலரும் செய்வதில்லை.

நன்மைகள் மற்றும் தீமைகள்
ஸ்மார்ட்போன்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொலைத்தூரத்தில் வசிக்கும் சொந்தங்களை இணைக்க பேருதவியாக கேட்ஜெட்கள் இருக்கிறது. தொலைதூர மக்களை இணைக்கும் இதே கேட்ஜெட்கள் தான் அருகில் இருப்பவர்களை தொலைதூரமாக இருப்பது போல் மாற்றுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.

88 சதவீத இந்திய தம்பதிகள்
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டிருக்கிறது. திருமணமான 88 சதவீத இந்திய தம்பதிகள் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தான் தங்கள் உறவை பாதிக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்விட்ச் ஆஃப் ஆய்வு
சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) உடன் இணைந்து விவோ, விவோவின் "ஸ்விட்ச் ஆஃப்" ஆய்வின் நான்காவது பதிப்பை வெளியிட்டுள்ளது. "ஸ்விட்ச் ஆஃப்" ஆய்வு என்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் புனே முழுவதும் 1000க்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துவதன் காரணத்தால் திருமணமான தம்பதிகளின் உறவுகளில் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்து ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் மற்றும் புனேவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் நேரத்தை ஆக்கிரமித்து விடுகிறது
இந்த ஆய்வின் போது, கணக்கெடுக்கப்பட்ட இந்திய திருமணமான தம்பதிகளில் 67 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும் போது கூட, ஸ்மார்ட்போன்கள் தங்களை ஆக்கிரமித்து விடுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பதிலளித்தவர்களில் 66 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மனைவி குறிக்கிட்டால் எரிச்சல்
ஸ்மார்ட்போன் அடிமையாதல் என்பது உரையாடல்களை சீர்குலைக்கிறது எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் 70 சதவீத மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மனைவி குறிக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
69 சதவீத தம்பதிகள் தங்கள் மனைவியுடன் உரையாடும் போது அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேபோல் மக்கள் ஸ்மார்ட்போனின் தாக்கத்தை ஏற்றுக் கொண்டு இதை மாற்ற விரும்புகிறார்கள் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது.

ஓய்வு நேரத்தின் உண்மையான அர்த்தம்
விவோ இந்தியாவின் பிராண்ட் வியூகத் தலைவர் யோகேந்திர ஸ்ரீராமுலா ஆய்வு குறித்து பேசுகையில், "இன்றைய வாழ்க்கையில் ஸ்மார்ட்போனின் முக்கியத்துவம் மறுக்க முடியாதது. அதிகப்படியான பயன்பாடுகள் என்பது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதியாக இருக்கிறது. ஒரு பொறுப்பான பிராண்டாக, அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதுதான் ஓய்வு நேரத்தின் உண்மையான அர்த்தம்" ஆகும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications