காதில் ஹெட்செட், தொடர்ச்சியாக 4 மணிநேரம் செல்போனில் கேம்: சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!
பொழுதுபோக்கு அம்சம் வாழ்வின் பிரதானமாகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலங்களில் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர் ஆன்லைன் கேம், சமூகவலைதளங்களில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினர். மேலும் ஏராளமானோர் ஆன்லைனிங் கேமிங்கிற்கு அடிமையாகினர் என்றே கூறலாம்.
குறிப்பாக பப்ஜி, லூடோ உள்ளிட்ட விளையாட்டுகளில் ஏராளோமானோர் தங்களின் நேரங்களை செலவிட்டனர். ஸ்மார்ட்போன்களை தேவையும் இந்த காலக்கட்டத்தில் அதிகரித்தது என்றே கூறலாம். மேலும் இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன் . இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடி வந்துள்ளார்.

தனது செல்போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமை 4 மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். அப்போது, காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, பதறி போன பெற்றோர் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
தொடர்ந்து, அவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அதிக சத்தத்துடன் கேம் விளையாடியதால், சிறுவன் மூளை நரம்பு பாதித்து உயிரிழந்தது தெரியவந்தது. அதிக நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pic Courtesy: Social Media


Click it and Unblock the Notifications