மொபைல் போன்களுக்கான புதிய சட்டம்.. இது எல்லாருக்குமே சிக்கல் தான்!
எல்லோருக்குமே சிக்கலாக அமையும், மொபைல் போன்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் தொடர்பான ஒரு புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதென்ன சட்டம்? இதனால் என்ன பயன்? இதனால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்? இந்த சட்டம் எப்போது முதல் அமலுக்கு வரும்? இது ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தானா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இனிமேல் வேலை இருக்காது!
அந்தந்த பிராண்ட் போன்களுக்கு, அதனுடன் வரும் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், இல்லை என்றால் ஸ்மார்ட்போனின் பேட்டரி வீணாகி விடும் என்கிற மொபைல் டிப்ஸ்களுக்கு இனிமேல் வேலை இருக்காது என்பது போல் தெரிகிறது!
ஏனென்றால் "சிங்கிள் சார்ஜர்" தொடர்பான சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜர் சட்டமா.. அப்படி என்றால் என்ன?
எல்லா மொபைல் போன்கள் அல்லது ஸ்மார்ட்போன்களுக்குமே ஒரே சார்ஜரை பயன்படுத்துவதே சிங்கிள் சார்ஜர் சட்டம் ஆகும்.
அதாவது ஸ்மார்ட்போன்களின் பிராண்டுகளை பொருட்படுத்தாமல், அவைகளில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்-ஐ பயன்படுத்த வேண்டும்!

இந்த சட்டம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் அல்ல!
ஆம்! இந்த "சிங்கிள் சார்ஜர்" சட்டமானது ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி, டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம், இது 2024 ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது!

இது எல்லாருக்குமே சிக்கல் தான்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய சட்டமானது, மொபைல் போன்களை தயாரிக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் பெரிய சிக்கலாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
குறிப்பாக ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிளுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்!

ஏனென்றால்?
ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட போன்களில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது தரநிலையாக (பொதுவானதாக) மாற்றப்படும் போது, ஐபோன்கள் மற்றும் பிற ஆப்பிள் டிவைஸ்களுக்கான சார்ஜிங் போர்ட்டை மாற்றும் கட்டாயம் ஆப்பிளுக்கு ஏற்படும்!
ஆப்பிளை மட்டுமின்றி, இந்த புதிய சட்டமானது சாம்சங், ஹூவாய் மற்றும் பிற மொபைல் தயாரிப்பாளர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்!

ஆனாலும் கூட 602 வாக்குகள் சாதகமாக விழுந்துள்ளன!
இந்த புதிய சட்டம் - புதுமைகளை பாதிக்கும் என்றும், பெரிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளை உருவாக்கும் என்றும் - இன்றோ நேற்றோ அல்ல - கடந்த பல மாதங்களாக ஆப்பிள் எச்சரித்து வருகிறது!
ஆனாலும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில், இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; வெறும் 13 வாக்குகள் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.!

சுமார் ரூ.2016 கோடி சேமிக்கப்படும்!
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் டிவைஸ்களை பயன்படுத்த வெவ்வேறு சார்ஜர்களுக்கு மாற வேண்டும் என்கிற அடிப்படை காரணமே இந்த புதிய சட்டத்திற்கு வித்திட்டது.
அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஆணையத்தின் கூற்றுப்படி, சிங்கிள் சார்ஜரை பயன்படுத்துவதன் வழியாக, ஆண்டுக்கு சுமார் 250 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.2016 கோடி) சேமிக்கப்படும்.

மற்ற சில புள்ளிவிவரங்கள்:
கடந்த 2018 ஆம் ஆண்டில், மொபைல் போன்களுடன் விற்கப்பட்ட பாதி சார்ஜர்களில் யூ.எஸ்.பி மைக்ரோ-யூ.எஸ்.பி கனெக்டரே உள்ளன.
அதில் 29 சதவிகிதம் யூ.எஸ்.பி டைப்-சி கனெக்டர்கள் ஆகும்; 21 சதவிகிதம் லைட்னிங் கனெக்டர்கள் ஆகும். அறியாதோர்களுக்கு லைட்னிங் கனெக்டர்கள் ஆனது ஆப்பிள் ஐபோன்களுக்கானது ஆகும்!


Click it and Unblock the Notifications