சல்யூட் அடிக்கும் சிங்கப்பூர்.. சந்திரயான்-3 அனுப்பின சைக்கிள் கேப்புல.. ISRO பார்த்த வேலை அப்படி!
கிடைக்குற கேப்புல எல்லாம் சாதனைகளை செய்வதில் தானொரு கில்லாடி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது, வருகிற ஜூலை 30 ஆம் தேதியன்று சைலன்ட் ஆக இன்னொரு தரமான சம்பவத்தை செய்யவுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவையுமே பெருமைப்பட வைக்கும் சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி முழுதாக மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில், வருகிற ஜூலை 30 ஆம் தேதியன்று இன்னொரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதென்ன ராக்கெட்? இதற்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:

அதென்ன ராக்கெட்? வருகிற ஜூலை 30 ஆம் தேதியன்று இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 மிஷன் (PSLV-C56 Mission) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து (குறிப்பிட்ட தேதியில்) காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
பிஎஸ்எல்வி-சி56 மிஷன் என்றால் என்ன? பிஎஸ்எல்வி-சி56 என்பது டிஎஸ்-எஸ்ஏஆர் (DS-SAR) என்கிற செயற்கைக்கோளை முதன்மை பேலோடாக கொண்ட ஒரு மிஷன் ஆகும். 360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளை 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதே இஸ்ரோவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மிஷனிற்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ள டிஎஸ்-எஸ்ஏஆர் சாட்டிலைட்டை உருவாக்கியதே சிங்கப்பூர் தான். இது சிங்கப்பூரின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Defense Science and Technology Agency - DSTA) மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட செயற்கைகோள் ஆகும்.
இந்த சிங்கப்பூர் செயற்கைகோளின் வேலை என்ன? டிஎஸ்-எஸ்ஏஆர் செயற்கைக்கோளில் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (Israel Aerospace Industries - IAI) உருவாக்கிய சிந்தெடிக் அபெர்க்ஷர் ரேடார் (Synthetic Aperture Radar -SAR) பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பமானது அனைத்து வகையான வானிலையிலும் பகல் மற்றும் இரவு நேர கவரேஜை வழங்கும் திறனுடையது.
மேலும் இது ஃபுல் போலோரைமெட்ரியின் கீழ் (Full Polarimetry) 1எம்-ரெசல்யூஷனில் இமேஜிங் செய்யும் திறனையும் (1m-resolution Imaging Capability) கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் செயல்பாட்டிற்கு வந்ததும், சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் செயற்கைக்கோள் படத் தேவைகளை இது பூர்த்தி செய்யும்.
ஒரே ஒரு சிங்கப்பூர் சாட்டிலைட் மட்டும் தான் விண்ணில் செலுத்தப்பட உள்ளதா? இல்லவே இல்லை! பிஎஸ்எல்வி-சி56 மிஷனின் கீழ் வேலாக்ஸ்-ஏஎம் (VELOX-AM) என்கிற 23 கிலோ தொழில்நுட்ப விளக்க நுண் செயற்கைக்கோள்; ஆர்கேட் (ARCADE) என்கிற ஒரு சோதனை செயற்கைக்கோள்; ஸ்கூப்-2 (SCOOB-II) என்கிற ஒரு 3யு நானோசாட்டிலைட்டும் (3U Nanosatellite) கூட பிஎஸ்எல்வி-சி56 மிஷனில் அடக்கம்.
அதுமட்டுமல்ல? கலாசியா-2 (Galassia-2) என்கிற இன்னொரு 3யு நானோசாட்டிலைட்டும் கூட விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது பூமியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளது. கடைசியாக ஆர்ப்-12 எஸ்டிரைடர் (ORB-12 STRIDER) என்கிற சர்வதேச ஒத்துழைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோளும் கூட பிஎஸ்எல்வி-சி56 மிஷனின் கீழ் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
94% வெற்றி விகிதம்னா சும்மாவா? சிங்கப்பூர் போன்ற பிற நாடுகள் இஸ்ரோவின் உதவியை நாட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தான். இது 94% வெற்றி விகிதத்தை கொண்ட இஸ்ரோவின் மிகசிறந்த ஏவுகணை ஆகும். ஜூலை 30 விண்ணில் செலுத்தப்படவுள்ள பிஎஸ்எல்வி-சி56 ஆனது விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இன்னொரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதெல்லாம் சரி.. சந்திரயான்-3 இப்போது எங்கே இருக்கிறது? சந்திரயான்-3 விண்கலமன்யு தனது ஐந்தாவது ஆர்பிட் ரெய்சிங் மென்யூவரை (5th Orbit-raising Maneuver) கடந்த ஜூலை 25 அன்று வெற்றிகரமாக முடித்ததாகவும், இப்போது பூமியை சுற்றி 71351 கிமீ x 233 கிமீ என்கிற அளவிலான சுற்றுப்பாதையில் இருப்பதாகவும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்ததாக சந்திரயான்-3 விண்கலத்தின் டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன் ( TransLunar Injection) ஆனது ஆகஸ்ட் 1, 2023 இல் திட்டமிடப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு, சந்திரயான்-3 என்பது சந்திர கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்து அதன் வரலாறு, புவியியல் மற்றும் வளங்களுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.
Photo Courtesy: ISRO


Click it and Unblock the Notifications








