Instagram வழியாக ஷாப்பிங் செய்கிறீர்களா? உஷார்! ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 29 லட்சம் இழந்த நபர்! எப்படி?
இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட் மற்றும் ஷாப்பிங் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், புது தில்லியில் உள்ள கிடோர்னியில் ஒரு நபர் இன்ஸ்டாகிராம் மூலம் ஐபோன் வாங்க முயன்ற போது ரூ.29 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ஷாப்பர் பயனர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, விகாஸ் கட்டியார் (Vikas Katiyar) என அடையாளம் காணப்பட்ட நபர் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்த போது மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு குறிப்பிடத்தக்கத் தள்ளுபடி விலையில் ஐபோன் கிடைக்கிறது என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

Instagram வழியாக ஷாப்பிங் செய்கிறீர்களா? உஷார் மக்களே!
சந்தையில் கிடைக்கும் ஐபோன் விலையை விட பல மடங்கு விலை குறைவாகக் கிடைக்கிறது என்ற விளம்பரத்தைப் பார்த்த விகாஸ் கட்டியார், பல ஆசையுடன் குறைந்த விலையில் ஐபோன் வாங்க முயன்றிருக்கிறார். அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் உண்மையானதா என்பதைச் சரிபார்க்க, அவர் அந்த பக்கத்தில் இருந்து இதற்கு முன் ஐபோன் வாங்கிய நபர்களுக்கு மெசேஜ் செய்திருக்கிறார்.
பழைய வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்ட போது, அவர்கள் அனைவரும் பக்கம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் ஐபோனை பெற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த உறுதிப்படுதலைத் தொடர்ந்து விகாஸ் பிப்ரவரி 6, 2023 அன்று, ஐபோன் வாங்குவதற்காக, அந்த பக்கத்தில் உரிமையாளரை மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
தள்ளுபடி செய்யப்பட்ட ஐபோன்களின் விற்பனையாளர்கள் ஃபோனின் மதிப்பில் 30 சதவீதத்திற்குச் சமமான விலையில் ஐபோனை வழங்குவதாக விகாஸிடம் வாக்குறுதியை வழங்கியுள்ளார். இதன் படி, புது ஐபோனை பெற ரூ. 28,000 தொகையை முன்பணமாகச் செலுத்துமாறு கோரியுள்ளார். பின்னர், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் உரிமையாளருக்குப் பல மொபைல் எண்கள் மூலம் அழைப்பு வந்துள்ளது.

அதில், ஐபோனை பெற அவர் சுங்கம் மற்றும் வரி அனுமதி என்று கூறி கூடுதல் நிதியைக் கோரியதாகக் கூறப்படுகிறது. பணம் செலுத்தியவுடன் ஐபோன் வாங்கித் தருவதாக நம்பி, விகாஸ் மொத்தமாக ரூ. 28,69,850 (தோராயமாக ₹ 29 லட்சம்) தொகையைப் பல கணக்குகளுக்கு மாற்றியதாகப் புகார் விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விகாஸிக்ரு இன்னும் பணமும் கிடைக்கவில்லை, ஐபோனும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது?
1. பொருளை வாங்குவதற்கு முன் இணையதளம் அல்லது விற்பனையாளரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், குறிப்பாக நம்ப முடியாததாகத் தோன்றும் Instagram பக்கங்களிலிருந்து வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
2. ஆன்லைனில் பணம் செலுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் பணத்தை மாற்றும் முன் பெறுநரின் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும்.
3. சரிபார்க்கப்படாத பக்கத்திலிருந்து வாங்கினால், தயாரிப்பைப் பெற்ற பிறகு மட்டுமே பணம் செலுத்துவதற்கு அனுமதிக்கும் கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

4. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதையும், தெரியாத மூலங்களிலிருந்து இணைப்புகளைப் பதிவிறக்குவதையும் தவிர்க்கவும்.
5. கிரெடிட்/டெபிட் கார்டு விபரங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
6. பரிவர்த்தனையின் பதிவு மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை எப்போதும் சேவ் செய்து வைப்பது சிறப்பானது.
7. பாஸ்வோர்ட், OTP விபரம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை எவருடனும் பகிர வேண்டாம்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஷாப்பிங் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போல, இந்த மூலத்தில் இருந்து நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதனால், விழிப்புடன் ஷாப்பிங் செய்யவும்.


Click it and Unblock the Notifications








