மக்கள் முடிவே இறுதி! Twitter சிஇஓ பதவியை ராஜினாமா செய்யவா? வாக்கெடுப்பு நடத்தும் மஸ்க்.!
Elon Musk ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறார். அதில் அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகலாமா வேண்டாமா என்பதை Twitter பயனர்கள் முடிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் உங்கள் முடிவை நான் கடைபிடிப்பேன் எனவும் அதில் உறுதி அளித்துள்ளார்.

ட்விட்டரில் நடத்தப்பட்டு வரும் இந்த கருத்துக் கணிப்பு முடிவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காலங்களாக ட்விட்டர் தலைமை நிர்வாக பதவியில் இருந்த மஸ்க், அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ட்விட்டர் ப்ளூ ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கு மீட்டெடுத்தல் என பல அதிரடி மாற்றங்களை செய்தார்.
Twitter தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என Elon Musk முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். இந்த பணிக்கு வேறு ஒருவரை மஸ்க் தேர்ந்தெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் பல நிறுவனங்கள் பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை என பல நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் மஸ்க். இதையடுத்து தற்போது ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக மஸ்க் முடிவு செய்துள்ளார்.
பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவை சந்தித்தார். இந்த நிலையில் மஸ்க் தற்போது வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்த இருக்கிறார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்கி அதை கண்காணிப்பில் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க், இனி டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை போன்றவற்றில் பெரிய அளவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் தலைமை நிர்வாக பதவியில் இருந்து மஸ்க் விலகினாலும், அதில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் துரிதமாக செயல்பட்டு செய்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. அதாவது, பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு எலான் மஸ்க் இறுதியாக Twitter ப்ளூ சந்தா சேவையை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார். ப்ளூ டிக் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்த பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
ஜாக் டோர்சி ட்விட்டரின் உரிமையாளராக இருந்த போது, சரிபார்ப்பு செயல்முறை அதாவது ப்ளூடிக் வழங்கல் என்பது எளிதாகவும் தெளிவாகவும் இருந்தது. ப்ளூடிக் சேவைக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையும் இருந்ததில்லை. ஆனால் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இதில் இருந்து வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கிறார். ப்ளூடிக் சேவையில் பெரிய மாற்றங்களை செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

ட்விட்டரின் ப்ளூடிக் சேவைக்கு சந்தா கட்டணம் என்ற முறையை கொண்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதை செயல்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து இந்த முடிவில் பின்வாங்கி வந்தார். இந்த நிலையில் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு ப்ளூடிக் சந்தா கட்டணத்தை செயல்படுத்தி இருக்கிறார் மஸ்க்.
உலகளவில் ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை $8 முதல் கிடைக்கிறது. அதேபோல் iPhone பயனர்களுக்கு $11 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐபோன் பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக்கு ரூ.999 செலுத்த வேண்டும். இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சந்தா சேவையானது ப்ளூ டிக், 1080 பிக்சல் வீடியோக்கள் பதிவிடும் திறன், ட்வீட் திருத்தம் உள்ளிட்ட பல ப்ரீமியம் அம்சங்களுக்கான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications