மீண்டும் விலை உயர்வு.. 1GB ஆக குறைக்கப்பட்ட 1.5GB பிளான்.. Vodafone-ஐ தொடர்ந்து Airtel, Jio-வும் செய்யுமா?
ஞாபகம் இருக்கிறதா? கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் மீதான விலை உயர்வை அறிவித்த வேகத்தில் ஜியோ (Jio) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களும் தத்தம் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. தற்போது அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.
வோடாபோன் ஐடியா நிறுவனமானது தனது பிரபலமான திட்டம் ஒன்றின் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மைகளை (Validity and Data Benefits) குறைத்துள்ளது. ஒரு திட்டத்தின் நன்மைகளை குறைப்பது அந்த திட்டத்தின் விலையை மறைமுகமாக அதிகரிப்பதற்கு (Secret Price Hike) சமம் என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படித்தான் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்ஜின் விலை உயர்த்தப்பட்டுள்ளது;அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை தான் குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் வோடபோன் ஐடியாவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டமானது 48 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை மட்டுமே வழங்கும். நினைவூட்டும் வண்ணம், முன்னதாக இது 56 நாட்களாக இருந்தது.
வேலிடிட்டி உடன் சேர்த்து ரூ.479 திட்டத்தின் டெய்லி டேட்டா லிமிட்டும் 1ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை வழங்கியது. இதுதவிர்த்து ரூ.479-ன் மற்ற நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்ந்து அன்லிமிடேட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும்
ஒட்டுமொத்தமாக 56 நாட்களுக்கு பதிலாக 48 நாட்கள், 1.5ஜிபி டெய்லி டேட்டாவில் இருந்து 1ஜிபி என ரூ.479-ன் விலை மறைமுகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மறைமுகமான விலை உயர்வை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனமும் செய்யுமா அல்லது இது வெறுமனே ஒரே ஒரு திட்டத்தில் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றமா? என்பதை அடுத்து வரும் சில நாட்களில் நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஏனென்றால் இந்தியாவின் 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே (Jio, Airtel, Vi), நுகர்வோரிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்க விரும்புகின்றன, இதனால் இந்நிறுவனங்கள் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (Average revenue per user - ARPU) மேம்படுத்த முடியும். அதிக ஏஆர்பியு-வை வைத்துள்ள நிறுவனத்தால் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
இந்திய அரசாங்கமும் விலை உயர்வு தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டதால்.. ஜியோவும் ஏர்டெல்லும் எப்போது என்ன செய்யும் என்று யாருக்குமே தெரியாது.இப்போதைக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல்-ஐ நிறுவனத்தை மட்டுமே நம்மால் முழுமையாக நம்ப முடியும்.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமல்ல, இப்போது வரையிலாக எந்த வகையான விலை உயர்வையும் அறிவிக்காத ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல் தான். இதன் விளைவாக பிஎஸ்என்எல் சேவையின் கீழ் பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்நிறுவனம் அதன் உள்நாட்டு 4ஜி கோர் (Indigenous 4G core) நெட்வொர்க்கை தெலுங்கானாவில் அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
அதாவது தற்போது தெலுங்கானாவில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி கோர் நெட்வொர்க் இயங்குகிறது; அங்கே உள்ள வாடிக்கையாளர்கள் முன்பை விட வேகமான இண்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்கலாம். இதுவொருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 41,000 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை இன்ஸ்டால் செய்து எனேபிள் செய்துள்ளது. அதே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்ட தளங்களின் நிறுவல்கள் முடிந்துவிட்டன. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 1 லட்சம் 4ஜி தளங்கள் நிறுவப்பட உள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள 2,910 இடங்களில் உள்ள 2ஜி / 3ஜி பிஎஸ்என்எல் டவரக்ள் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத்தின் 949 கிராமங்களுக்கு 4ஜி சேவைகளை கொண்டு செல்ல பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








