கரை ஒதுங்கிய அரிய வகை கடல் டிராகன்கள்.! வைரல் ஆகும் படங்கள்.! உண்மையில் இது என்ன?
பிரபஞ்சத்தைப் போலவே ஆழ்கடலும் பல ரகசியங்களை கொண்டுள்ளது. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆழ்கடலில் குவிந்து கிடக்கின்றன. அவை எப்போதும் கடலுக்குள்ளே இருக்கும் என்பதால் நமக்கு அவற்றின் இருப்பு பற்றி பெரும்பாலும் தெரிவதில்லை.
சில சமயங்களில், அந்த உயிரினங்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெகு தூரம் தள்ளி வரும் பொழுது, திசை மாறி, ஏதேனும் கடல் சுழற்சிகளில் சிக்கிக் கரை ஒதுங்கும். அப்படி, இதுவரை பல அரிய கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கியதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வரிசையில் இப்பொழுது ஒரு கடல் ட்ராகன் (Sea Dragon) கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரிய வகை கடல் டிராகன்கள்.! இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.!
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் பெய்த வரலாறு காணாத கனமழைக்குப் பின்னர், ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளில் பல வினோதமான கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளதை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கவனித்துள்ளனர். அந்த வகையில் மிகவும் வண்ணமயமான உடல் அமைப்பு கொண்ட கடல் ட்ராகன் என்னும் உயிரினம் கரை ஒதுங்கி உள்ளது. இதனை பொதுவாக வீடி ஸீ டிராகன் (Weedy Sea Dragon) என்று அழைப்பர்.
இந்த வீடி ஸீ டிராகனானது கிரனுலா (Cronulla), மலபார் (Malabar) மற்றும் மத்திய கடற்கரை (Central Coast) பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை உயிரினம் அவ்வளவு எளிதில் தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்து இவ்வாறு கரை ஒதுங்குவதில்லை.

ஆழ்கடல் சீ டிராகன்கள் எப்படி கரை ஒதுங்கின? என்ன காரணம்?
இதனைப் பற்றி சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மெரைன் இகாலஜி (Marine Ecology) பேராசிரியர் முனைவர் டேவிட் பூத் (Dr. David Booth) கூறுகையில், இந்த வீடி ஸீ டிராகனானது கடற் குதிரையின் வகையைச் சேர்ந்தது. பொதுவாக இந்த வகையான வீடி ஸீ டிராகன்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் வரை தான் சென்று உணவு தேடுவது போன்ற தனக்கான செயல்பாடுகளில் ஈடுபடும்.
கடலில் இருக்கும் குப்பைகள் ஒன்றாக சேர்ந்து வெளியேறும் பொழுது, பல்வேறு வானிலை சீற்றங்கள் காரணமாக, பெரிய கடல் அலைகளில் சிக்கி இந்த அரிய உயிரினமானது கரை ஒதுங்கி இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இந்த உயிரினம் கரை ஒதுங்கியது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாகவும், இவை இவ்வாறு கரை ஒதுங்க அவற்றின் இருப்பிடத்தை விட்டு வழிதவறி வந்ததும், அந்த சமயம் நடந்துள்ள காலநிலை மாற்றமும் தான் காரணமாக இருக்கும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

காலநிலை மாற்றங்களால் பூமியின் அரிய வகை உயிரினங்கள் அழிக்கின்றதா?
பொதுவாக இந்த உயிரினத்தை ஆழ்கடலில், மூழ்கி நீச்சல் செய்பவர்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம். இவை மிகவும் வண்ணமயமாக, கவர்ச்சிகரமான நிறங்களில் தனித்துவமான வடிவம் கொண்ட உயிரினங்கள் ஆகும். டாக்டர் பூத் இந்த வீடி ஸீ டிராகன்களை பற்றி ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம். ஒவ்வொரு வீடி ஸீ டிராகனிற்கும் தனித்துவமான உடல் அமைப்பு மற்றும் வண்ணம் இருக்கும். அவற்றை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) கொண்டு கண்டறிந்து டாக்டர் பூத் கண்காணித்து வருகிறார்.
காலநிலை மாற்றம் காரணமாகக் குளிர்ந்த நீரை நோக்கி அவை இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று டாக்டர் பூத் கூறுகிறார். குர்ணலில் (Kurnell) உள்ள பாட்டனி பேயில் (Botany Bay) சுமார் ஏழு முதல் எட்டு வீடி ஸீ டிராகன்கள் காணப்பட்டு வந்த நிலையில், இப்போது இரண்டு அல்லது மூன்று மட்டுமே இருப்பதாக அவர் கூறுகிறார்.
வீடி ஸீ டிராகன்களின் உடல்களை கையாள்வது சட்டத்திற்கு விரோதமானதாக இருந்தாலும் உங்கள் கண்களில் இந்த வீடி ஸீ டிராகன் பட்டால் அதன் புகைப்படங்களை எடுத்து அனுப்புமாறும், அது தனது ஆராய்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும், தனக்குத் தெரிந்த வட்டாரத்தில் டாக்டர் பூத் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடி ஸீ டிராகன்கள் ஆழ்ந்த கடல் சுழற்சிகளிலும் உயிர்பிழைக்கும் தன்மையைக் கொண்டவை. ஆனால் தனது இருப்பிடத்தின் சுற்றுச்சூழல் தன்மைகளுக்கு மட்டுமே ஏதுவான உடல் நிலையை கொண்டுள்ளதால் அதனை விட்டு வெளியே இருக்கும் கடல் சீற்றங்களில் சிக்கும் பொழுது அவற்றால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. வரும் காலத்தில் இந்த வீடி ஸீ டிராகன்கள் விரைவில் அழிவை நெருங்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications