ISRO-விடம் வம்பிழுக்கும் ரஷ்யா.. குறுக்கே வரும் Luna-25.. சந்திராயன்-3 உடன் மோதுமா? விஞ்ஞானிகள் விளக்கம்!
இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-3 விண்கலம் (Chandrayaan-3 Spacecraft) ஆனது நிலவின் மேற்பரப்புக்கு அருகில் சென்று 174 கிமீ x 1437 கிமீ என்கிற தொலைவிலான சுற்றுவட்ட பாதையில் உள்ளது.
இந்த தூரம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று இன்னும் குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலமானது நிலவுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லப்படும். இதற்கிடையில் இந்தியாவின் நிலவு பயணத்துடன், ரஷ்யாவும் அதன் சந்திர கிரக பயணத்தை தொடங்க உள்ளது.

ஆம்! சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவானது தனது முதல் மூன் மிஷனை (Moon Mission) ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று நடக்கும்படி திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தை போலவே ரஷ்யாவானது லூனா-25 (Russia Luna 25) என்கிற விண்கலத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தவுள்ளது.
ரஷ்யாவின் இந்த மூன் மிஷனை மேலோட்டமாக பார்த்தால்.. மற்ற நாடுகளை போல ரஷ்யாவும் நிலவை ஆராய்ச்சி செய்ய போகிறது இதில் சந்திரயான்-3 க்கு என்ன சிக்கல் இருக்கிறது என்றே தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால் ரஷ்யாவின் லூனா-25 மற்றும் சந்திரயான்-3 ஆகிய இரண்டுமே "ஒரே நாளில்.. ஒரே பகுதியில்" நிலவில் தரையிறங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவின் சந்திரயான்-3 மற்றும் லூனா-25 ஆகிய இரண்டுமே நிலவின் தென் துருவ (Moon's South pole) பகுதியில் தரையிறங்க திட்டமிட்டுள்ளன, ஏனெனில் அந்த பகுதியில் தான் தனித்துவமான மற்றும் முக்கியமான அளவிலான பனிக்கட்டிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அவைகளை குடிநீராக மாற்றலாம், எரிபொருளாக மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்தெடுக்கவும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
எனவே தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவ பகுதியை குறிவைத்துள்ளனர். இருப்பினும் நிலவின் தென் துருவமானது, தரை இறங்குவதற்கான மிகவும் எளிதான ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை. அது கரடுமுரடான நிலப்பரப்பாக இருக்கும்; அங்கே தரையிறங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.
இதுவே இஸ்ரோவிற்கு பெரும் சவாலாக இருக்கப்போகும் நிலைப்பாட்டில், ரஷ்யாவின் லூனா-25 ஆனது சந்திரயான் 3-க்கு குறுக்கே வரும் என்பது போல் தெரிகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல் (5,550 கிமீ) தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து லூனா-25 மிஷன் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது நிலவுக்கு செல்ல 5 நாட்கள் ஆகும். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி இது சந்திரனின் சுற்றுப்பாதையில் 7 நாட்கள் இருக்கும். பின்னர் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கலாம். அதவாது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் அதே ஆகஸ்ட் 23 ஆம் தேதியில் இதுவும் தரையிறங்க உள்ளது.
இரண்டு விண்கலங்களும் ஒரே துருவத்தில் தரை இறங்கினாலும் கூட, இவைகள் வெவ்வேறு தரையிறங்கும் பகுதிகளை கொண்டிருப்பதால் இவ்விரு விண்கலங்களும் ஒன்றுக்கொன்று இடையே வராது என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். "அவைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவது அல்லது மோதுவது போன்ற ஆபத்துகள் எதுவும் இல்லை. நிலவில் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது." என்று கூறியுள்ளனர்.
இஸ்ரோ மற்றும் ரஷ்யாவின் இரண்டு மூன் மிஷன்களும் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான வெவ்வேறு நோக்கங்களையும் நேரங்களையும் கொண்டுள்ளன. இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் ஆனது சந்திர கிரகத்தில் ஒரு சந்திர நாளை கழிக்கும். அறியாதோர்களுக்கு ஒரு சந்திர நாள் என்றால் பூமியில் உள்ள நேரப்படி 14 நாட்கள் ஆகும்.
மறுகையில் உள்ள ரஷ்யாவின் லூனா-25 மிஷன் ஆனது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 6 அங்குலத்திற்கு கீழே உறைந்த நீர் இருப்பதை கண்டறியும் தனது ஆய்வைத் தொடர்ந்து செய்யவுள்ளது. ரஷ்யாவின் இந்த சந்திர பயணம் ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் நடக்கும்படி திட்டமிடப்பட்டது, ஆனால் இரண்டு ஆண்டுகள் தாமதமாகி 2023 ஆகஸ்ட் 11ல் நடக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








