பூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை!
பூமியில் எங்குத் தூய்மையான காற்றை மனிதர்கள் சுவாசிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் குழு தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. இந்த தூய்மையான பகுதி பூமியில் எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏன் இந்த பகுதியில் மட்டும் காற்று மாசடையவில்லை என்று தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மிகவும் மோசமான பேரழிவு
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் மிகவும் மோசமான ஒன்று காற்று மாசுபாடு தான், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மாசினால் பெரிதும் பாதிக்கப்படுவது மனிதன் தான் என்பது இன்னும் சில மனிதர்களுக்கே புரியாமல் இருக்கிறது என்பது தான் வேதனை. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் காற்று மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

காற்று மாசினால் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
நாம் அனைவரும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க விரும்புகிறோம், ஆனால் மனித செயல்பாடு காரணமாக, நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான காற்று மாசுபட்டுள்ளது. மாசடைந்த காற்றினால், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் மனிதர்களிடையே அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் (WHO) மதிப்பிட்டுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் தூய்மையான காற்றைக் கொண்ட வளிமண்டலப் பகுதி
இப்போது பூமியில் தூய்மையான காற்றைக் கொண்ட வளிமண்டலப் பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த தூய்மையான காற்று உள்ள இடம் அனைத்து மனித மக்களிடமிருந்தும் வெகு தொலைவில் அமைந்துள்ளது. பூமியில் இந்த இடம் அண்டார்டிகாவின் தெற்கு பெருங்கடல் பகுதியில் அமைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் கரங்களுக்கு எட்டாத தொலைவில் தூய்மையான காற்று
அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள தெற்குப் பெருங்கடலில் உள்ள வளிமண்டலப் பகுதி மனிதனின் கரங்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளதினால் எந்தவித இயற்கை நிலையும் மாறாமல் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் குழு அதன் முதல் ஆய்வில் கண்டறிந்துள்ளது என்று சி.என்.என் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு கொலராடோ மாநில பல்கலைக்கழக பேராசிரியர் சோனியா க்ரீடென்வீஸ் என்பவர் தலைமையில் நடந்துள்ளது.

மாசு துகள்கள் மற்றும் ஏரோசோல் (aerosol) துகள் இல்லாத 100% தூய்மையான காற்று
பேராசிரியர் க்ரீடென்வீஸ் மற்றும் அவரது குழுவினர் தங்கள் ஆராய்ச்சியின் போது, தெற்குப் பெருங்கடலின் எல்லையில் உள்ள காற்று மிகவும் தூய்மையானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள காற்று எந்த விதமான மாசு துகள்கள் மற்றும் ஏரோசோல் (aerosol) துகள்கள் இல்லாமல் முற்றிலும் தூய்மையாக இருக்கிறது என்றும், தெளிவான காற்றை முதல் முறையாக இந்த குழு சுவாசித்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.

காற்று எங்கிருந்து வருகிறது என்று தேடி சென்ற விஞ்ஞானிகள்
சமீபத்தில் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறை நிகழ்ச்சியின் போது இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. தூய்மையான பகுதியை அடையாளம் காண, விஞ்ஞானிகள் காற்றின் கூறுகளையும் அது எங்கிருந்து வருகிறது என்பதையும் ஆய்வு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், பூமியின் மிகவும் தூய்மையான காற்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் தொடரும் ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சி குழுவில் உள்ள விஞ்ஞானியும் இணை ஆசிரியருமான தாமஸ் ஹில் கூறுகையில், தெற்கு பெருங்கடல் மேகங்களின் பண்புகளைக் கட்டுப்படுத்தும் ஏரோசோல்கள் கடல் உயிரியல் செயல்முறைகளுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அண்டார்டிகா நுண்ணுயிரிகளின் தெற்கே பரவல் மற்றும் ஊட்டச்சத்து படிவு ஆகியவை தெற்கு கண்டங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications