மனிதர்களை போலவே மூச்சு விடுது.. பீதியை கிளப்பும் ANDI ரோபோட்.. விஞ்ஞானிகள் ஏன் இதை உருவாக்கினார்கள்?
மூச்சு விடும் ரோபோட் (Breathing Robot) என்றதுமே, உங்களுக்குள் லேசான பீதி கிளம்பி இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பாக வெளியாகும் பெரும்பாலான தகவல்கள் நம்மை அச்சமடைய செய்கின்றன.
குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் நடந்த யேல் சிஇஓ உச்சிமாநாட்டில் (Yale CEO Summit) எடுக்கப்பட்ட கணக்கெடுப்பானது ஏஐ தொடர்பான பயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த கணக்கெடுப்பின்படி, அடுத்த சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பமானது மனிதகுலத்தை கைப்பற்றும் என்று 42 சதவீத சிஇஓ-க்கள் நம்புகிறார்கள்.

அதாவது சுமார் 42 சதவீத சிஇஓக்கள், அடுத்த 5 முதல் 10 வருடங்களில் மனிதகுலத்தை அழிக்கும் ஆற்றல் ஏஐ-யிடம் இருப்பதாக நம்புகிறார்கள். சிஇஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மனிதர்களுக்கு ஏஐ குறித்து அச்சம் இருப்பதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் மூச்சு விடும் ரோபோட் குறித்து நாம் துளிக்கூட கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை!
இன்னும் சொல்லப்போனால், விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த அற்புதமான கண்டுபிடிப்பின் நன்மைகளை கண்டு நீங்கள் வியந்தும் கூட போகலாம். ஆண்டி (ANDI) என்பது அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் (Arizona State University) இணைந்து தெர்மெட்ரிக்ஸ் (Thermetrics) என்கிற நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் முதல் மூச்சு விடும், வியர்க்கும், நடுக்கத்தை வெளிப்படுத்தும் ரோபோட் ஆகும்.
அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இணைப் பேராசிரியரான கொன்ராட் ரைகாசெவ்ஸ்கியின் (Konrad Rykaczewski) கூற்றுப்படி, ஆண்டி ரோபோட்டிற்கு வியர்வை வரும், அது நடுக்கத்தை வெளிப்படுத்தும் மற்றும் சுவாசிக்கும்". விஞ்ஞானிகள் இந்த ஆண்டி ரோபோட்டை தெர்மல் மேனெக்வின் (Thermal Mannequin) என்றும் அழைக்கிறார்கள்.
ஏனென்றால் இது, மனித உடலில் ஏற்படும் வெப்பம் மற்றும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட் ஆகும். இது தனித்தனியாக-கட்டுப்படுத்தப்பட்ட 35 மேற்பரப்புகளை (Individually Controlled Surfaces) கொண்டுள்ளது; அதாவது இது மனித உடலில் காணப்படும் துளைகளை போன்றது, எனவே இதனால் வெவ்வேறு வெப்பநிலைகளை ஏற்றுக்கொள்ள முடியும்.
விஞ்ஞானிகளின் விளக்கத்தின்படி, வெப்பநிலை தொடர்பான எங்களுடைய சோதனைகளுக்காக மனிதர் உயிர்களை ஆபத்திற்குள் தள்ள முடியாது. அதாவது மனிதர்களை தீவிரமான வெப்பநிலைக்குள் வைத்து சோதனை செய்ய முடியாது. ஆனால் ஆண்டி ரோபோட் அப்படி கிடையாது. ஆண்டியால் மட்டுமே சில மர்மங்களை அவிழ்க்க முடியும்.
இந்த தெர்மல் மேனெக்வின் (ஆண்டி ரோபோட்) மூலம் மனித உடலை வெப்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். மேலும் அதை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளையும் நம்மால் வடிவமைக்க முடியும். இது மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகும். ஏனெனில் தீவிர வெப்பத்தை பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தாலும், கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
விஞ்ஞானிகள் கூறுவது போலவே, ஆண்டி ரோபோட் ஆனது ரோபாட்டிக்ஸ் (Robotics) மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு அற்புதமான வளர்ச்சியாகும். ஏனென்றால் இது மனித உடலில், வெப்பத்தின் தாக்கத்தை பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கான புதிய வாய்ப்புகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது.
Photo Courtesy: Christopher Goulet / ASU / Video Grab / Reuters


Click it and Unblock the Notifications