Bank அக்கவுண்ட்ல ரூ.20000-க்கு மேல் Savings இருக்கா? புது UPI மோசடி அம்பலம்.. முதல்ல ரூ.200 வரும்.. அப்புறம்?
உங்கள் வங்கி கணக்கிற்கு திடீரெனெ எதிர்பாராமல் பணம் வருவது உங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாததாக ஒரு விஷயமாக தோன்றலாம். ஆனால் அது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை காலி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நுட்பமான யுபிஐ (UPI) மோசடியின் முதல் படியாக இருக்கலாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது
மோசடிக்காரர்கள் வேண்டுமென்றே ஒருவருடைய வங்கி கணக்கிற்கு ஒரு சிறிய தொகையை மாற்றிவிட்டு, பின்னர் அந்த பரிமாற்றம் தற்செயலாக நடந்ததாக கூறி அவர்களை தொடர்புகொள்ளும் "ஜம்ப்டு டெபாசிட் மோசடி" (Jumped deposit scam) குறித்து எஸ்பிஐ ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடியின் நோக்கம் பணத்தை மீட்பது அல்ல, மாறாக பணம் அனுப்பபட்ட நபரை ஏமாற்றி, அதைவிட பெரிய தொகையைச் செலுத்த ஒப்புதல் பெற வைப்பதே ஆகும். தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, மோசடிக்காரர்கள் - நம்பிக்கையையும் மனித நடத்தையையும் மூலதனமாக வைத்து செய்யும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகள் தொடர்ந்து உருவாகி வரும் நேரத்தில் இந்த எஸ்பிஐ எச்சரிக்கை வந்துள்ளது.
இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது? எஸ்பிஐ-யின்படி, இந்த மோசடி பொதுவாக பல கட்டங்களாக நடைபெறுகிறது: ஒரு மோசடிக்காரர் ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு ஒரு சிறிய தொகையை, பெரும்பாலும் சில ரூபாய்கள் அல்லது சில நூறு ரூபாய்களை டிரான்ஸ்பர் செய்கிறார். பின்னர், அந்த பரிமாற்றம் தவறுதலாக செய்யப்பட்டது என்று கூறி, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு போன் கால் அல்லது மெசேஜ் வருகிறது.
அந்த மோசடிக்காரர் உடனடியாக பணத்தைத் திரும்ப கேட்டு, பணிவாகவோ, மன உளைச்சலுடனோ அல்லது விரக்தியுடனோ பேசுவார். பாதிக்கப்பட்டவரை நேரடியாக பணத்தை அனுப்ப சொல்வதற்கு பதிலாக, மோசடிக்காரர் யுபிஐ மூலம் "பணம் வசூலிக்கும் கோரிக்கை" அல்லது பணம் செலுத்துவதற்கான ஒப்புதல் கோரிக்கையை அனுப்புவார்.
தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தை திருப்பி அனுப்புவதாக நம்பி, பாதிக்கப்பட்டவர் அந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறார். ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த பரிவர்த்தனை, எதிர்பார்த்ததை விட கணிசமாக அதிக தொகையாக இருக்கலாம், இது நிதி இழப்புக்கு வழிவகுக்கும். இந்த மோசடியில் - மோசடிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோள்கள் அல்லது புனையப்பட்ட அவசரநிலைகளை பயன்படுத்தி, விவரங்களை சரிபார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக செயல்பட அழுத்தம் கொடுப்பதன் மூலம், ஒரு அவசர உணர்வை உருவாக்குகிறார்கள் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.
கைமேல் பலன் தரும் மோசடி: மற்றவர்கள் செய்த தவறை திருத்துவதற்கு உதவும் இயல்பான மனிதப் போக்கை பயன்படுத்திக் கொள்வதால் இந்த மோசடி மிகவும் நன்றாகவே வேலை செய்கிறது. தவறுதலாக வந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதுதான் சரியான செயல் என்று பலரும் கருதுவதால், தங்களுக்கு வரும் பணப் பரிமாற்ற கோரிக்கையை அவர்கள் கவனமாக ஆராய்வதில்லை.
மோசடிக்காரர்கள் பாஸ்வேர்ட்களையோ அல்லது ஒடிபி-களையோ கேட்கும் பாரம்பரிய ஃபிஷிங் முயற்சிகளை போலல்லாமல், பாதிக்கப்பட்டவர்களே பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த மோசடி பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. சமூக பொறியியல் தாக்குதல்கள் (social engineering attacks) நிதி மோசடியின் மிகவும் வெற்றிகரமான வடிவங்களில் ஒன்றாகும் என்று இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்ட காலமாகவே குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், அவை தொழில்நுட்ப பாதுகாப்புகளை உடைக்க முயற்சிப்பதை விட, நம்பிக்கையைத் தவறாக பயன்படுத்துகின்றன.
இனிவரும் நாட்களில் எதிர்பாராத விதமாகப் பணம் வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தவறுதலாக பணம் அனுப்பியதாக கூறும் அறிமுகமில்லாத அழைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எஸ்பிஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்., குறிப்பாக ரூ.10,000 - ரூ.20,000 க்கு மேலாக சேவிங்ஸ் வைத்து உள்ளவர்கள்.
- தங்கள் பேங்க் ஆப் அல்லது பேங்க் ஸ்டேட்மென்ட் மூலம் பரிவர்த்தனையை சரிபார்க்கவும்.
- பணத்தின் மூலம் (சோர்ஸ்) குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால், தங்கள் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
- அறியப்படாத நபர்களிடமிருந்து வரும் எந்த யுபிஐ கலெக்ட் கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிப்பதை தவிர்க்கவும்.
- அவசரத்தையோ அல்லது மன அழுத்தத்தையோ உருவாக்கும் கோரிக்கைகளை புறக்கணிக்கவும்.
- சந்தேகத்திற்கிடமான மொபைல் நம்பர்களை உடனடியாக பிளாக்'செய்யவும்
- முடிந்தவரை விரைவில் இந்த சம்பவத்தை வங்கிக்குத் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications