SBI பேங்க் 2 புது ரூல்ஸ்.. மே 1 முதல் அமல்.. இனி ரூ.100 கட்டணம், ரூ.1 லட்சம் லிமிட்.. ஒரே நேரத்தில் 2 மாற்றம்!
நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தினால், அடுத்த மாதம் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன. எஸ்பிஐ கார்டு அதன் தாமத கட்டணங்களை (late payment charges) திருத்தியுள்ளது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கான வருடாந்திர கட்டண தள்ளுபடி நிபந்தனைகளையும் புதுப்பித்துள்ளது.
இந்த மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இதுகுறித்த தகவல்களை தெரிந்துகொண்டு கூடுதல் செலவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

புதிய தாமத கட்டணங்கள் குறித்த விளக்கம்: மிகப்பெரிய மாற்றம், குறைந்த நிலுவை தொகைப்பிரிவில் உள்ளது. முன்னதாக, ரூ.500 வரையிலான நிலுவை தொகைக்கு தாமதக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இப்போது, உங்கள் நிலுவைத் தொகை ரூ.100 முதல் ரூ.500 வரை இருந்தால், ரூ.100 தாமத கட்டணம் விதிக்கப்படும்.
அதுவே ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலான நிலுவை தொகைக்கு, கட்டணம் ரூ.400 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் நிலுவைத் தொகை ரூ.1,000-ஐ தாண்டினால், தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
தாமத கட்டணங்கள் எப்போது விதிக்கப்படும்? கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவை தொகையையாவது செலுத்த தவறினால், தாமத கட்டணம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு இந்த குறைந்தபட்ச கட்டணத்தை நீங்கள் செலுத்தத் தவறினால், கூடுதலாக ரூ.100 அபராதம் சேர்க்கப்படும். நீங்கள் நிலுவை தொகையை செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் கட்டணம் தொடரும், இதனால் தாமதங்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.
பிபிசிஎல் எஸ்பிஐ (BPCL SBI) அட்டைதாரர்கள் அதிக செலவு இலக்கை எதிர்கொள்கின்றனர்: எஸ்பிஐ அறிவித்துள்ள மற்றொரு முக்கிய மாற்றம் பிபிசிஎல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களை பாதிக்கிறது. தற்போது, நீங்கள் ஒரு வருடத்தில் ரூ.50,000 செலவு செய்தால் ரூ.499 ஆண்டு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மே 1, 2026 முதல், இந்த வரம்பு ரூ.1 லட்சமாக இரட்டிப்பாகும். எளிமையாக சொன்னால், அதே கட்டண தள்ளுபடி பலனை பெற, நீங்கள் இப்போது ஆண்டுக்கு இரு மடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும்.
முந்தைய மாற்றங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன: இந்த 2026 ஆம் ஆண்டில், எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள முதல் மாற்றம் இதுவல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 2026 இல், எஸ்பிஐ கார்டு ஆனது அது வழங்கிய ரிவார்ட்ஸ் மற்றும் பலன்கள் தொடர்பான விதிகளை திருத்தியது. அதன்படி:
- கேஷ்பேக் சலுகைகளுடன் இணைக்கப்பட்ட வெகுமதி புள்ளிகள் இப்போது 90 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
- உடனடி தள்ளுபடி சலுகைகளிலிருந்து கிடைக்கும் புள்ளிகள் காலாவதியான 120 நாட்களுக்குள் பயன்படுத்தப்படலாம்.
- விமான நிலைய ஓய்வறை அணுகல், செட் ஏ மற்றும் செட் பி என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் அணுகல் இப்போது உங்கள் குறிப்பிட்டகார்டு வகையைப் பொறுத்தது.
எஸ்பிஐ அறிவித்துள்ள மாற்றங்கள் உங்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இந்த மாற்றங்கள், நீங்கள் செலுத்த வேண்டிய தொகைகளையும், செலவுகளையும் கண்காணிப்பதை முன்னெப்போதையும் விட முக்கியமானதாக ஆக்குகின்றன. பணம் செலுத்துவதில் ஏற்படும் சிறிய தாமதங்கள் கூட இப்போது கூடுதல் கட்டணங்களுக்கு வழிவகுக்கும்.
அதே சமயம், கட்டண விலக்குகளை பெற அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. பணம் செலுத்துவதிலும் பயன்பாட்டிலும் ஒழுக்கத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது போன்ற பழக்க வழக்கம் ஆனது உங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டை சரியாக மற்றும் முழுமையாக பயன்படுத்துவதற்கு சிறந்த வழியாக இருக்கும்!


Click it and Unblock the Notifications








