புது ரூல்ஸ்.. அக்டோபர் 1 முதல் அமல்.. 1000 ரூபாயோ.. 5000 ரூபாயோ.. இனி இதுதான் லிமிட்.. SBI அறிவிப்பு..
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வியாழக்கிழமை (ஆக.20) அறிவித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் புதிய விதி
இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிக் கிளைகள் மூலம் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டண விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதன்படி ஒரு மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பு எடுப்பதற்குக் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. ஆனால் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். இதனுடன் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.குறிப்பாக SBI ATM, பிற வங்கி ATM, வங்கி கிளையின் கவுண்டர்கள், ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை அமைப்புகளின் மூலம் பணம் எடுக்கும் முறைகளும் இதில் அடங்கும்.
அதேசமயம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்றும், அவை தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த மாற்றம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக ஐந்து பரிவர்த்தனைகளாக இருந்த விதியை தற்போது நான்கு பரிவர்த்தனைளாக எஸ்பிஐ மாற்றியமைத்துள்ளது. அதேபோல் எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு என்பது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத வகை கணக்காகும். மேலும், இந்தக் கணக்கிற்கு காசோலைப் புத்தகம் வழங்கப்படாது.
கட்டணங்களைத் தவிர்ப்பது எப்படி?
மாதத்திற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முடிந்தவரை ஒன்று அல்லது இரண்டு முறைகளில் எடுத்துக்கொள்வது கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க உதவும். அடிக்கடி சிறிய தொகைகளாக பணம் எடுப்பதைத் தவிர்த்து, தேவையான தொகையை ஒரே முறையில் எடுத்துக்கொள்வது சிறந்தது.
உதாரணமாக, ரூ.500 அல்லது ரூ.5,000 என அடிக்கடி பணம் எடுப்பதால், நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனை வரம்பை கடந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாதச் செலவுக்குத் தேவையான தொகையை ஒரே முறையில் எடுத்துக்கொண்டால், கூடுதல் பணம் எடுப்பு கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

UPI மற்றும் SBI YONO போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பணம் எடுப்பதற்கான கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக, மளிகைக் கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது UPI மூலம் பணம் செலுத்துவது வசதியான மாற்றாக இருக்கும்.
அதேபோல், SBI YONO செயலி மூலமாகவும் தேவையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதனால் அடிக்கடி ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்குச் சென்று பணம் எடுப்பதை குறைத்து, கிடைக்கக்கூடிய இலவச பரிவர்த்தனை வரம்பை திறம்பட பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications