ப்ராஜெக்ட் ஜீரோ பகீர் ரிப்போர்ட்: Samsung, Vivo, Google போன்களில் இப்படி ஒரு ஆபத்தா? உங்க போன் இதில் இருக்கா?
Samsung மற்றும் Vivo ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மொபைல் பயனர்களே உஷார்.! உங்கள் போனில் பாதுகாப்பு குறைபாடு இருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற ஒரு திடுக்கிடும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. உங்களிடம் சாம்சங், விவோ, கூகுள் போன் இருந்தால் இந்த பதிவை படியுங்கள்.
சாம்சங், விவோ அல்லது கூகுள் போன் வைத்துள்ள பயனர்களில், எந்த மாடல் போனை வைத்திருப்பவர்கள் இந்த சிக்கலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற விளக்கம் கீழே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசமான பாதுகாப்பு சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான விளக்கமும் கீழே உள்ளது. ஆகையால், பதிவை இறுதி வரை படித்துப் பயன்பெறவும்.

பாதுகாப்பு குறைபாடுகள் பெரும்பாலும் கவலைக்குரிய பகுதியாக இருப்பதால், ஒவ்வொரு முறையும் தங்கள் தயாரிப்பில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் அதை சரிசெய்ய நிறுவனங்கள் கடினமாக உழைக்கின்றது என்பதே உண்மையாக இருக்கிறது. இந்த நேரத்தில், கூகிள் பிக்சல் சீரிஸ் மாடல்கள் மற்றும் சில Samsung Galaxy சீரிஸ் மாடல்கள் போன்ற மிகச் சமீபத்திய போன்களில் இந்த செக்யூரிட்டி சிக்கல் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வகை போன்களில் பயன்படுத்தப்படும் Exynos மோடம்கள் காரணமாக, இந்த கடுமையான பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால், ஸ்மார்ட்போன் பயனர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பாதுகாப்பு குறைபாடு என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாம்சங் எக்ஸினோஸ் மோடம்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டை கூகுளின் பிரத்தியேக பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவான ப்ராஜெக்ட் ஜீரோ கண்டறிந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வலைப்பதிவு இடுகையின் அடிப்படையில், பலவிதமான எக்ஸினோஸ் மோடம்கள் பலவிதமான பாதிப்புகளைக் கொண்டிருக்கின்றன என்றும், அவை "பயனர் தொடர்பு இல்லாமல் பேஸ்பேண்ட் மட்டத்தில் ஒரு போனை தொலைவிலிருந்து மூன்றாம் நபர் அணுக இது அனுமதிக்கிறது" என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த சிக்கலை ஹேக்கர்கள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமென்று கூறப்பட்டுள்ளது.

ப்ராஜெக்ட் ஜீரோ குழு, எக்சினோஸ் மோடம்களில் மொத்தம் 18 பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது. அவற்றில் நான்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் முக்கியமான பாதிப்புகளாகும். இதில் ஒன்று இன்டர்நெட்-டு-பேஸ்பேண்ட் ரிமோட் கோட் செயல்படுத்தலை அனுமதிக்கின்றது. மற்றவை, மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் சிக்கல் அல்லது மூன்றாம் நபருக்கு அணுகலை வழங்கும் பாதுகாப்பு சிக்கல் போன்ற சிறிய கோளாறுகளைக் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு சிக்கல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? எந்த மொபைலில் எது பெரியளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று பார்த்தால், அந்த பட்டியலில் Samsung Galaxy S22, Samsung Galaxy M33, Samsung Galaxy M13, Samsung Galaxy M12, Samsung Galaxy A71, Samsung Galaxy A53, Samsung Galaxy A33, Samsung Galaxy A21s, Samsung Galaxy A13, Samsung Galaxy A120 ஆகியவை அடங்கும்.
சாம்சங் போன்களைத் தவிர, Vivo S16, Vivo S15, Vivo X70, Vivo X60 மற்றும் Vivo X30 சீரிஸ் போன்ற விவோ ஃபோன்களும் இந்த பாதிப்பால் தாக்கப்பட்டுள்ளது. Exynos Auto T5123 சிப்செட்டைப் பயன்படுத்தும் எந்த சாதனமும் பாதிக்கப்படக்கூடியது என்பதே உண்மை. இது தவிர, Google Pixel 7 மற்றும் Pixel 6 தொடர் ஸ்மார்ட்போன்களும் பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலில் ஒரு பகுதியாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சிக்கலுக்கான தீர்வு என்னவென்றால், விரைவில் விற்பனையாளரிடமிருந்து நிரந்தரத் திருத்தம் வருவதற்கு முன், ஆபத்தில் உள்ள பயனர்கள் தங்கள் சாதனத்தில் வைஃபை அழைப்பு மற்றும் வாய்ஸ்-ஓவர்-எல்டிஇ (VoLTE) ஆகியவற்றை OFF செய்து வைப்பது பாதுகாப்பானது. இப்படிச் செய்தால், பேஸ்பேண்ட் ரிமோட் குறியீடு செயல்படுத்தல் பாதிப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். செக்யூரிட்டி அப்டேட் வெளியிடப்படும் வரை இதை மட்டுமே செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








