சாம்சங் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணுரீங்களா? இன்டர்நெட் பிரவுசருக்கு சம்பவம் இருக்கு.. சாட்ஜிபிடி ஸ்கெட்ச்!
ஓப்பன் ஏஐ (OpenAI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி எட்டிவரும் அதீத வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடியின் பேச்சாகவே இருக்கிறது. சொல்லப்போனால், நாள்தோறும் தினுசு தினுசாக சாட்ஜிபிடியை வைத்து ஏதாவதொரு சம்பவம் நடந்து வருகிறது. இப்போது, உலகளவில் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது.
இந்த சாட்ஜிபிடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை கண்டு மிரண்டுபோன கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft) போன்ற பெரும் நிறுவனங்களே, சாட்ஜிபிடி போன்றதொரு பிரத்யேக சாட்பாட்டை உருவாக்கிவிட்டன. இப்போது, செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களிடையே கடும் போட்டியே நிலவி வருகிறது. இப்படி சாட்ஜிபிடி மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

இந்த சாட்ஜிபிடியானது, தொழில்நுட்பத்துறையை கடந்து, கல்வி, மருத்துவம், சினிமா, விவசாயம் என்று எந்த துறைகளில் இருந்து, எந்த கேள்வியை கேட்டாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களை கொடுக்கிறது. இந்த பதில்களும் ஏனோ தானோ என்று இருக்காமல், துல்லியமாக இருப்பதால் நாளுக்கு நாள் அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வளவு வரவேற்பு பெற்ற சாட்ஜிபிடியானது, ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது பிரத்யேக இன்டர்நெட் பிரவுசர்களை அவற்றின் போன்களில் கொடுத்து வருகின்றன. இருப்பினும், குரோம், ஆப்பிள் சபாரி, பயர்பாக்ஸ், எட்ஜ் போன்ற பிரவுசர்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களது பிரவுசர்களில் அசைக்க முடியாத அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டு வருகின்றன. அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம், சாட்ஜிபிடி சாட்பாட்டை தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக, அடுத்து வெளியாக இருக்கும் சாம்சங் இன்டர்நெட் பிரவுசர் (Samsung Internet Browser) வெர்ஷன் 22.0.0.54 இல் சாட்ஜிபிடி சாட்பாட் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட தொடங்கிவிட்டன. ஆனால், சாம்சங் நிறுவனம், அதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேவேளையில், மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், அது உண்மையான தகவல் என்றே தோன்ற வைக்கிறது. ஒருவேளை சாம்சங் இன்டர்நெட் பிரவுசரில் சாட்ஜிபிடி வந்தால், அதுவொரு ஆப் போலவே பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே, கனிசமான எண்ணிக்கையில் சாம்சங் இன்டர்நெட் பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாட்ஜிபிடி வந்தால் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், சாம்சங் போன்களை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் கூட சாட்ஜிபிடிக்காக வந்தால் போதும், சாம்சங் இன்டர்நெட் பிரவுசரை எத்தனை கோடி பேர் பயன்படுத்துவார்கள் என்பதை நீங்களே கணக்குபோட்டு கொள்ளுங்கள்.
மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








