விளம்பரத்திற்கு ரூ.100 கோடி : ஆப்பிளை வீழ்த்த சாம்சங் திட்டம்.!!
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே நடக்கும் போட்டி அனைவரும் அறிந்ததே. சந்தையில் முதலிடம் பிடிக்க இரு நிறுவனங்களும் தங்களது கருவிகளை முன்வைத்து போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தை முந்த சாம்சங் நிறுவனம் தனது புதிய கருவிகளுக்கு ரூ.100 கோடி செலவில் விளம்பரங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதம் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகளுக்கு விளம்பரம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த முடிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு ஐபோன் மாடல்களுக்கு விளம்பரம் செய்வதோடு சில கருவிகளின் விலையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சுமார் ரூ.30-40 கோடி வரை விளம்பரங்களில் செலவு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய சந்தையின் முக்கியத்துவம் அறிந்து சாம்சங் கருவிகளின் வெளியீட்டிற்கு ஆப்பிள் நிறுவனம் தனது கருவிகளுக்கு விளம்பரம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பினை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் ஏதேனும் வித்தியாசமாக செய்தாக வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவிகளின் விலை ரூ.50,000க்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், பெரும்பாலும் இவைகளின் விலை ரூ.45,000 முதல் துவங்கலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த விலையில் ஆப்பிள் கருவிகளுக்கு விலை அடிப்படையில் சிறந்த போட்டியை வழங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதோடு நேரடி விற்பனை நிலையங்களில் சாம்சங் விளம்பர பலகைகளை அதிகளவில் வைக்க சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதிகளவு போட்டியின் காரணமாக இரு நிறுவன கருவிகளின் விலை குறைக்கப்பட்டால், இந்த போட்டி இந்திய வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் நன்மையானதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








