இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறமா காசு கொடுங்க! Samsung-இன் "அடேங்கப்பா" ஆபர்!
நம்ம கேப்டன் விஜயகாந்த் நடித்த 'ரமணா' திரைப்படத்தில் வரும் பிரபல வசனத்தை அப்படியே கொஞ்சம் 'உல்டா'வாக மாற்றி.. "புது போன் வந்துட்டா போதுமே.. பழைய போன்கள் மேல ஆபர்களை அள்ளி வீசுவீங்களே!" என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பார்த்து கேட்டால் - அது மிகையாகாது.

ஏனெனில் அதுதான் உண்மை!
எவ்வளவு லாபம் வைத்து விற்க முடியுமோ அவ்வளவும் வைத்து விற்பனை செய்துவிட்டு, புதிய மாடல்களின் அறிமுக தேதி வெளியான வேகத்தில் பழைய மாடல்களின் மீது அதிரடி விலைக்குறைப்பு, வங்கி சலுகைகள், வெப்சைட் வழியிலான சலுகைகள் போன்ற ஆபர்களை அறிவிப்பது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதல்ல!

பட்ஜெட் போன் முதல் ஆப்பிள் ஐபோன் வரை... இதுவொரு பழக்கமாகி விட்டது!
"அவங்க கொடுத்து பழகிட்டாங்க.. நாம வாங்கி பழகிட்டோம்!" என்கிற அளவுக்கு திடீர் சலுகைகள் நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமாகி விட்டன.
சமீப காலமாக பழைய ஆப்பிள் ஐபோன்கள் மீது (அதாவது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மீது) எக்கச்சக்கமான சலுகைகள் அணுக கிடைக்கிறது அல்லவா.. அதெல்லாம் ஏன் என்று நினைக்கிறீர்கள்? வாடிக்கையாளர்கள் மீது பாசமா?
கிடையாவே கிடையாது. ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் விரைவில் (வருகிற செப்டம்பர் 2022-இல்) அறிமுகம் செய்யப்பட உள்ளன, அதனால் தான்!

அதே பாணியை கையில் எடுத்துள்ள சாம்சங்! ஆனால் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில்!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக Buy now, Pay later (இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்) என்கிற ஆபரை அறிவித்துள்ளது.
உடனே இந்த சலுகையின் கீழ் ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போனையோ அல்லது ஒரு மிட்-ரேன்ஞ் மாடலையோ வாங்கலாம் என்று நீங்கள் திட்டமிட்டால்.. கொஞ்சம் பொறுங்கள்!

இது "அந்த" மாதிரியான சலுகை அல்ல!
ஏனெனில் சாம்சங் நிறுவனம் அதன் 'பை நௌவ், பே லேட்டர்' ஆபரின் கீழ் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ் மற்றும் ஃபோல்ட் 3 மற்றும் ஃபிளிப் 3 போன்ற நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது.
உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்!
ஆம்! சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான ஃபோல்ட் 4 மற்றும் ஃபிளிப் 4 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் விளைவாக உருவானதே இந்த 'பை நௌவ், பே லேட்டர்' ஆபர்!

இந்த ஆபரின் கீழ் போன்கள் FREE ஆக கிடைக்குமா?
இந்த Buy now, Pay later ஆபரின் வழியாக முதல் முறையாக ஃபிளாக்ஷிப்கள் மற்றும் ஃபோல்டபிள்களில் மீதான சலுகைகளை "கட்டவிழ்த்து" விடுவதாக சாம்சங் கூறுகிறது.
மேலும் இந்த ஆபர், பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான எளிதான மற்றும் நெகிழ்வான "உரிமையை" வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றும் சாம்சங் நம்புகிறது.
ஆனால் இந்த சலுகையை பெற சில தகுதிகளும் இருக்க வேண்டும். ஒன்று நீங்களொரு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு-ஐ வைத்திருப்பவராக இருக்க வேண்டும் மற்றும் அதில் குறைந்தபட்ச கிரெடிட் லிமிட் ஆக ரூ 1.5 லட்சம் இருக்க வேண்டும்.

சரி எல்லா தகுதிகளும் இருக்கு.. எப்படி வாங்குவது?
இந்த ஆபரின் கீழ் நீங்கள் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், அந்த ஸ்மார்ட்போனின் மொத்த தொகையில் 60 சதவீதத்தை 18 சமமான மாதத் தவணைகளில் செலுத்தலாம்.
மீதமுள்ள 40 சதவீத தொகையை 19 வது தவணையாக 'புல்லட் பேமண்ட்' ஆக செலுத்தலாம் என்று சாம்சங் கூறுகிறது.

சாம்சங் Galaxy S22 விலை விவரங்கள்!
நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் Samsung Galaxy S22 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,09,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே ஸ்மார்ட்போன் 12ஜிபி + 512ஜிபி மற்றும் 12ஜிபி + 1டிபி ஆப்ஷன்களின் கீழும் வாங்க கிடைக்கிறது. அவைகள் முறையே ரூ.1,18,999 மற்றும் ரூ.1,34,999 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாம்சங் Fold 3 மற்றும் Flip 3 விலை விவரங்கள்:
முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனும் வாங்க கிடைக்கும்.
ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,39,999 க்கும் மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடலானது ரூ.1,47,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மறுகையில் உள்ள ஃபிளிப் 3 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.84,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.89,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

இந்த சலுகை எங்கெல்லாம் அணுக கிடைக்கும்?
சாம்சங் நிறுவனத்தின் இந்த Buy now, Pay later சலுகையை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், இந்தியா முழுவதும் உள்ள ரீடெயில் ஸ்டோர்களை அணுகலாம்.

ஃபோல்ட் 4 மற்றும் ஃபிளிப் 4 எப்போது அறிமுகமாகும்?
சாம்சங் நிறுவனத்தின் இந்த 'பை நௌவ், பே லேட்டர்' ஆபருக்கு காரணகர்த்தாவான ஃபோல்ட் 4 மற்றும் ஃபிளிப் 4 ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சாம்சங் தனது அடுத்த 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வை வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடத்துகிறது.
இந்த நிகழ்வில், நிறுவனத்தின் "அடுத்த தலைமுறை" மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான ஃபோல்ட் 4 மற்றும் ஃபிளிப் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் 5 சீரீஸும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!
Photo Courtesy: Samsung, Amazon


Click it and Unblock the Notifications