சாட்டிலைட் உதவியுடன் ரயில் கொள்ளை வழக்கில் "10 பேர்" 2 ஆண்டுக்குப் பின் கைது.!
2 ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாம் அனைவரும் மறந்திருக்கமாட்டோம்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாம் அனைவரும் மறந்திருக்கமாட்டோம். ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு 2 ஆண்டுகளுக்குப் பின், இப்பொழுது இஸ்ரோசாட்டிலைட் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளது.
கடந்த 2016 ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.சேலத்திலிருந்து இரவு புறப்பட்ட ரயில் அதிகாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த போதுதான் ரயில் பெட்டியில் கொண்டுவரப்பட்ட பண பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

ரூ.5 கோடியே 78 லட்சம்
ஓடும் ரயிலில், ரயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தை ரயில்வே போலீஸார் முதலில் விசாரணை செய்ய துவங்கியது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

350 கிலோ மீட்டர் ஆய்வு
சிபிசிஐடியின் தடயவியல் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சேலத்திலிருந்து சென்னை வரும் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்து ஓடும் ரயிலில் பணம் எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று பல கோணத்தில் விசாரணையை மிக மும்முரமாகத் துவங்கி துப்பு துலக்க ஆரம்பித்தது.

சிபிசிஐடி தனிப்படை
கொள்ளையடிக்கப்பட்டது மின்சார ரயிலாக இருந்தாலும், சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் எஞ்சினாக பயணித்து வந்திருப்பது தெரிய வந்தது. ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அன்று அங்கு வேளையில் இருந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் ரயில் நிலைய காவலர்கள் அனைவரையும் தனி தனியாக விசாரித்தது சிபிசிஐடி தனிப்படை. இருப்பினும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

இஸ்ரோ சாட்டிலைட்
தற்பொழுது இந்த வழக்கு புதிதாக மாற்றப்பட்ட அம்ரேஷ் புஜாரி ஏடிஜிபி இன் கைக்கு வந்து சேர்ந்தது. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க இஸ்ரோ உதவியை நாடியுள்ளார் அம்ரேஷ் புஜாரி. இஸ்ரோ உதவியுடன் சாட்டிலைட் புகைப்படம் கிடைத்தது, இதில் பணம் எந்த இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டு சிபிசிஐடி விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

பத்து செல்போன் எண்கள்
கிடைத்த துப்புகளை வைத்து அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களைத் துப்பு துலக்க ஆரம்பித்தது சிபிசிஐடி தனிப்படை. அதே நேரத்தில் அந்த இடத்தில் இயக்கப்பட பத்துக்கும் மேற்பட்ட எண்களைக் கண்டறிந்த சிபிசிஐடி அவை அனைத்தும் மத்திய பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்று கண்டுபிடித்துள்ளது.

"10" கொள்ளையர்கள் கைது
இவர்களை சிபிசிஐடி தனிப்படை குழு ரயில் கொள்ளை வழக்கில், "10" கொள்ளையர்களைக் கைது செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கு சாட்டிலைட் உதவியுடன் ஒரு முடிவிற்கு வந்துள்ளது. கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் யார்? யார்? என்று சிபிசிஐடி விரைவில் தெரிவிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications