மொபைல் ஆப்ஸ் போன் மூலம் 20 லட்சம் கள்ள நோட்டு அடித்த கும்பல்.. போலீசிடம் மாட்டியது எப்படி?
மொபைல் போன் மூலம் 200 ரூபாய் நோட்டை நகலெடுத்து, அதை சாதாரண ப்ரிண்டரை வைத்தே அச்சடித்து, ரூ.20 லட்சம் வரையிலான கடனை அடைக்க முயன்ற ஒரு வினோதமான கும்பல் தற்போது சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் சிக்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் இருக்கும் ராஜகணபதி நகரைச் சேர்ந்த ஒரு இறைச்சி கடை மூலம் இந்த கள்ளநோட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த அண்ணாதுரைஎன்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை, வழக்கம் போல இவரது கடையில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர்.

இவரது கடைக்கு வந்த ஒரு நபர், அண்ணாதுரையிடம் இறைச்சிக்கான தொகையாக 3 ரூ.200 நோட்டுகளை வழங்கி இருக்கிறார். அந்த நபரிடம் இருந்து வாங்கிய ரூபாய் நோட்டுக்களை அண்ணாதுரை பிடித்து பார்த்தபோதே சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. உற்று கவனித்த அண்ணாதுரைக்கு அது கள்ள நோட்டு என்பது புலப்பட்டுள்ளது.
வாங்கிய பொருளுக்கு கள்ள நோட்டை விநியோகம் செய்வதாக அண்ணாதுரை கூச்சலிட, அருகில் இருக்கும் மக்கள், கள்ள நோட்டு வழங்கிய நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கள்ள நோட்டு விநியோகம் செய்த நபரை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்ப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் ஒரு விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாரின் சோதனையின் போது, ஒரு சாதாரண கலர் பிரிண்டரை பயன்படுத்தி இவர்கள் கள்ள நோட்டுகளை அச்சடித்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மிகவும் சாமர்த்தியமாக அவர்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி, 200 ரூபாய் நோட்டுகளை, அசல் போன்ற கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். அதேபோல், பேன்சி ஸ்டோரில் இருந்து கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவருக்கு ரூ.20 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக அவர், கள்ள நோட்டு அச்சிட முடிவு செய்திருக்கிறார்.
இவருடன் சேர்த்து, அப்துல் அகீம் (24), மற்றும் உபைஸ் அலி (24) என்பவர் உதவியுடன் இந்த வேலையை செய்து வருகிறது. பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் ஆப்ஸ் மூலமாக நகலெடுத்து அச்சடித்துள்ளனர். அச்சடித்த போலி நோட்டுகளை இவர்கள் மூவரும் மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இப்படி போலி நோட்டுகளை இவர்கள் பல நாட்களாக, பல இடங்களில் புழங்க விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், ஞயிற்றுக்கிழமை காஜாமைதீன் நகல் எடுத்த 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து, இறைச்சி கடைக்கு சென்று நாட்டுக் கோழி வாங்கிவர சொல்லியிருக்கிறார். இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்த பிறகு இவர்களின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது.
இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுக்கும் வேறு ஏதேனும் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலுக்கும் எதுவும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








