ஐபோன் தயாரிப்பு நிறுவனம் சூறையாடல்: மொத்தம் ரூ.437 கோடி நஷ்டம்-நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!
தைவான் தலைமையிடமான விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், கோலார் மாவட்டத்தின் நரசபுரா தொழில்துறை பகுதியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலை வளாகத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன் 7, லெனோவா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான ஐடி தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

சம்பளம் தராமல் இழுத்தடித்ததாக தகவல்
ஐபோன் மற்றும் ஐடி தயாரிப்புகளைத் தயாரிக்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் தராமல் இழுத்து அடித்தது என்று ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சம்பளம் கேட்டு போராடிய ஊழியர்களுக்கு நிறுவனம் சரியான பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் கலவரத்தைத் துவங்கியுள்ளனர்.

நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம்
நரசபுரா தொழிற்பேட்டையில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் 5000-த்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். மூன்று முதல் நான்கு மாதங்கள் சம்பளம் தரவில்லை என ஆவசேமடைந்து ஊழியர்கள் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்பேட்டையில் வெடித்த கலவரம்
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நரசபுரா தொழிற்பேட்டையில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் கலவரம் வெடித்தது. ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள வாகனங்கள், கணினிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர்.

காவல்நிலையத்தில் அளித்த புகார்
இதுகுறித்து வேமகல் காவல் நிலையத்தில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் செயல் அதிகாரி டிடி.பிரசாத் புகார் அளித்துள்ளார். அதில் இதில் மேஜைகள், தொலைபேசிகள், உற்பத்தி இயந்திரம் உள்ளிட்ட ரூ.412.5 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மொத்தமாக ரூ.437.70 கோடி இழப்பு
மேலும் உள்கட்டமைப்பு வசதிகள், கார்கள், ஸ்மார்ட்போன்போன்கள் என இதர கருவிகள் என சுமார் ரூ.12 கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் மொத்தமாக ரூ.437.70 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆயிரக்கணக்கான ஐபோன்கள் திருடப்பட்டதாகவும் தனியார் செய்தி நிறுவனம் அறிவித்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத சமூக விரோதிகள்
மேலும் செயல் அதிகாரி காவல்நிலையத்தில் அளித்துள்ள மனுவில் சுமார் 5000 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள், 2 ஆயிரம் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வன்முறை செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் நிறுவனத்தின் ஊழியர்கள், அணியினர் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியவம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்ததாரர்கள் செய்த தாமதம்
இதில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் என மூன்று தரப்பு இருக்கிறது. கோலார் ஆலையில் சுமார் 8,900 ஊழியர்களை பணியில் அமர்த்த விஸ்ட்ரான் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதில் ஒப்பந்ததாரர்களுக்கு நிறுவனம் தொகையை செலுத்தி விட்டதாகவும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை செலுத்த தாமதப்படுத்தியதாகவும் கர்நாடக அரசு தரப்பில் கூறப்புகிறது.

விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார்
கர்நாடக அரசு இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறது எனவும் நிறுவனத்துக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை செயல் வேண்டும் என்றே திட்டமிட்ட செயலா என போலீஸார் தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications