எச்சரிக்கை.. தினமும் 3 மணி நேரத்துக்கு மேல மொபைல் யூஸ் பண்ற ஸ்கூல் பிள்ளைங்களுக்கு "இந்த" பாதிப்பு ஏற்படுமாம்!
உங்கள் வீட்டில் பள்ளிக்கு செல்லும் பதின்ம வயது (Teen Age) ஆண் பிள்ளையோ அல்லது பெண் பிள்ளையோ இருக்கிறார்களா? அதாவது 14 முதல் 18 வயதை அடைந்த பிள்ளைகள் இருக்கிறார்களா? ஆம் என்றால்.. இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் தான்!
பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், தினமும் 3 மணி நேரத்திற்கு மேல் மொபைல் போன் / ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் 14 முதல் 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஒரு பொதுவான பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மொபைல் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக பார்ப்பது, கண்களுக்கும் மொபைலுக்கும் இடையே குறைவான தூரம் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, வயிற்றை கீழ் வைத்தபடி படுத்து கிடப்பது போன்ற செயல்பாடுகளானது தொராசிக் முதுகெலும்பு வலிக்கு வழிவகுக்கும்.
இந்த ஆய்வு டிஎஸ்பி (TSP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொராசிக் முதுகெலும்பு வலி (Thoracic Spine Pain) மீது அதிக கவனம் செலுத்தி உள்ளது. தொராசிக் முதுகெலும்பானது மார்பின் பின்புறத்தில் (தொராக்ஸ்) அமைந்துள்ளது, இது பெரும்பாலும் தோள்பட்டை பிளேடுகளுக்கு இடையில், கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பு முதுகுத்தண்டின் ஆரம்பம் வரை நீண்டுருக்கும்.
தொடர்ச்சியான மொபைல் பயன்பாட்டுடன் தொடர்புடைய உடல் நல பாதிப்புகளை பற்றி கண்டறியும் இந்த ஆய்வில், நேரடியாக பள்ளி குழந்தைகளே ஈடுபடுத்தப்பட்டனர். சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் படிக்கும் 14 முதல் 18 வயதுடைய ஆண் மற்றும் பெண் மாணவர்களை கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2017 மார்ச் - ஜூன் மாதத்தில் 1,628 பங்கேற்பாளர்களிடம் (மாணவர்களிடம்) சில அடிப்படை கேள்விகளை கொண்ட வினாத்தாள் (Baseline Questionnaire) கொடுக்கப்பட்டு, பதில் எழுதும்படி பணிக்கப்பட்டது. பின்னர் 2018 இல் அவர்களில் 1,393 பேர் ஒரு பின்தொடர்தல் கேள்வித்தாளையும் (Follow-up Questionnaire) நிறைவு செய்தனர்.
அந்த இரண்டையும் பகுப்பாய்வு செய்ததில், அடிப்படை மற்றும் பின்தொடர்தல் ஆய்வு ஆகிய இரண்டிலுமே 38.4% பேர் தொராசிக் முதுகெலும்பு வலியால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், ஓராண்டு கழித்து நடத்தப்பட்ட பின்தொடர்தல் கணக்கெடுப்பில் 10.1% பேர் புதிதாக தொராசிக் முதுகெலும்பு வலியால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி டிஎஸ்பி தொடர்பான இந்த ஆய்வில் கலந்து கொண்ட மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தொராசிக் முதுகெலும்பு வலியால் பாதிக்கபட்டுள்ளனர் என்கிற தகவலும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மொபைல் பயன்பாட்டு நேரத்தை முடிந்த வரை கட்டுப்படுத்துமாறு ஆரய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தொராசிக் முதுகெலும்பு வலியானது 14 வயது முதல் 18 வயது பிள்ளைகளுக்கு மட்டும் தான் வருமா என்று கேட்டால் - இல்லவே இல்லை. டிஎஸ்பி (TSP) என்பது உலகெங்கிலும் உள்ள பொது மக்கள்தொகையின் வெவ்வேறு வயதினருக்கு மிகவும் பொதுவான ஒரு உடல்நல பாதிப்பாகும்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 15% - 35% பெரியவர்கள் தொராசிக் முதுகெலும்பு வலியால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கோவிட் 19 தொற்றுநோய் காலமானது மின்னணு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, முதுகெலும்பு தொடர்பான இந்த சிக்கலை இன்னும் மோசமாக்கி உள்ளது. இதுவரை எப்படியோ.. இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்கவும் - எல்லா வயதினரும் தான்!


Click it and Unblock the Notifications








