திரும்ப வாங்க இல்லனா ராஜினாமா செய்யுங்க: எலான் மஸ்க் அனுப்பிய இமெயில்- டெஸ்லா ஊழியர்கள் அதிர்ச்சி!
கோவிட்-19 தொற்றுநோய் பரவல் என்பது பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்திருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக பள்ளிக் கல்லூரியில் படித்தவர்கள் ஆன்லைன் வகுப்பு ஆன்லைன் தேர்வு என்ற முறைக்கு மாற்றப்பட்டனர். கொரோனா காலத்தில் சில நிறுவனங்கள் லாபம் கிடைப்பதில்லை என்று கூறி வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் விடுபட்டு வரும் நிலையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட "வொர்க் ஃப்ரம் ஹோம்" திட்டம் படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அனுப்பிய இமெயில்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், டெஸ்லா ஊழியர்கள் உடனே அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும், வாரத்துக்கு 40 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் வேலையில் இருந்து வெளியேறும்படி எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் உலகை ஆக்கிரமித்த போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று பரவலில் இருந்து விடுபட்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டம் முடிவு
இதையடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு திரும்பும்படி அறிவுறுத்தி வருகிறது. பிரபல முக்கிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதன்படி டெஸ்லா நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வழங்கிய வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இதுகுறித்த மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதில் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டம் முடிவுக்கு வருவதாகவும், ஊழிர்கள் மீண்டும் அலுவலகத்துக்கும் வரும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

ரிமோட் வேலை இனி ஏற்றுக் கொள்ளப்படாது
"ரிமோட் வேலை இனி ஏற்றுக் கொள்ளப்படாது" என்ற தலைப்பில் மின்னஞ்சலை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறார். வீட்டில் இருந்தே வேலை பார்க்க ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அதில் மஸ்க் தெரிவித்திருக்கிறார். "இது தொழிற்சாலை தங்களது தொழிலாளர்களிடம் கேட்பதை விட குறைவானது" என குறிப்பிட்டிருக்கிறார்.
40 மணிநேரமாவது அலுவலகத்துக்கு வர வேண்டும்
வீட்டில் இருந்தே வேலை செய்வோர் குறைந்தபட்சம் 40 மணிநேரமாவது அலுவலகத்துக்கு வர வேண்டும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். எலான் மஸ்க் அனுப்பிய இந்த மெயில் ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அலுவலகத்துக்கு வரும் சூழலில் இல்லாத ஊழியர்களின் நிலையை நேரடியாக மதிப்பாய்வு செய்து வீட்டில் இருந்தே வேலை பார்க்க ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தங்களது ஊழியர்களுக்கு அனுப்பிய ரகசிய மின்னஞ்சலின் ஸ்க்ரீன் ஷாட் டுவிட்டரில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

இலவச மின்சார ஸ்கூட்டர்கள்
சமீபத்தில் கூகுள் நிறுவனமும் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கும் திரும்பும்படி கேட்டுக் கொண்டிருந்தது. கூகுள் நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருவதை ஊக்குவிக்க, இலவச மின்சார ஸ்கூட்டர்கள் வழங்குவதாக அறிவித்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு முன்னதாக இலவச பேருந்து சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்கள் அலுவலகம் வருவதை ஊக்குவிக்க இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்குவதாக அறிவித்தது. புதிய ரைடு ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் கூகுள் இ-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான உனகி உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications