ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா மீது புகார் அளித்த ரிலையன்ஸ் ஜியோ.!!
பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வர்க்களுக்கு மாற விடாமல் தடுப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் நெட்வர்க்கில் இருந்து வேறு நெட்வர்க்களுக்கு தங்களது மொபைல் நம்பரை மாற்றாமலேயே மாறும் வழிமுறை இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நெட்வர்க் பயன்படுத்தும் பயனர்கள் வேறு நெட்வர்க்களுக்கு மாற விடாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க ரிலையன்ஸ் ஜியோ சார்பில் மத்திய தொலைத்தொடர்பு மைய தலைவர் ஆர் எஸ் சர்மாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதம்:
அதன் படி ரிலையன்ஸ் ஜியோ அனுப்பிய கடிதத்தில் பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாற விடாமல் தடுக்கும் முயற்சியில் சட்ட விரோதமாக ஈடுபட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்து:
மத்திய தொலைத்தொடர்பு மையத்தின் விதிமுறைகளை வேண்டுமென்றே மீறியிருப்பதை இச்சம்பவம் தெளிவாக விளக்கியுள்ளதால் குறிப்பிட்ட நிறுவனங்கள் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றாத பட்சத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் உரிமத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ரிலையன்ஸ் ஜியோவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில்:
ரிலையன்ஸ் ஜியோவின் குற்றச்சாட்டிற்கு பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களிடம் இருந்து எவ்வித பதிலோ அல்லது மறுப்பு அறிக்கையும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீறல்:
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ஒழுங்குமுறை மற்றும் விதிமுறைகளை மீறும் செயல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது என ரிலையன்ஸ் ஜியோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு மைய தலைவருக்கு ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தக் கடிதத்தை அனுப்பியது.

அனுமதி:
இந்தியா முழுக்க அனைத்துத் தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வசதி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரத்து:
சட்ட ரீதியாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்யும் கோரிக்கை வழங்கிய பின்பும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து மொபைல் நம்பர் போர்டபிலிட்டி கோரிக்கைகளையும் ரத்து செய்திருக்கின்றது என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications