அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்
சகோதரர் முகேஷ் அம்பானியை பிரிந்து தனியாக அனில் திருபாய் அம்பானி குரூப்(ADAG) என்ற பெயரில் அனில் அம்பானி நிறுவனம் தொடங்கினார். ஆரம்பம் முதலே சருக்கலை மட்டுமே சந்தித்து வந்த அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து அடியாக விழுந்தது. இதில் ஜூலை 2019- செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் மட்டும் ரூ.30,142 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புதான் காரணம்?
இந்த நஷ்டத்திற்கு காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் என்று தெரிவிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டணம் உள்ளிட்டவை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள மீதத் தொகையை உடனடியாக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புதான் நஷ்டத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ்.காம் செலுத்த வேண்டிய கட்டணம்
இந்த தீர்ப்பின் மூலம் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களே நிலுவைத் தொகையை கட்டுவதற்கு சிரமப்படுகின்றன. இந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் உரிமக் கட்டணம் ரூ.3,632 கோடி, உரிமக் கட்டணம் தாமதமாக செலுத்துவதற்கான வட்டி ரூ. 7,681 கோடி, உரிமக் கட்டணத்தைச் செலுத்த தவறியதற்கான அபராதம் ரூ. 1,789 கோடி, அபராதத்தை செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி ரூ. 3,355 கோடி என மொத்தமாக ரூ.16,456 கோடி செலுத்த வேண்டி உள்ளது.

நஷ்டத்தில் உள்ள நிறுவனம் எப்படி கடனை செலுத்தும்
முன்னணி நிறுவனங்களே இந்த தீர்ப்பின் மூலம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த திணறி வருவதாகவும் கூறப்பட்டு வரும் நேரத்தில், நஷ்டத்தில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் எப்படி இந்த தொகையை செலுத்தி எப்படி மீளப்போகிறது என்ற கேள்வி தொலைத் தொடர்பு நிறுவன வட்டாரங்களிடையே எழுந்தது.

அனில் அம்பானி ராஜினாமா
இந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிக்க முடியாது அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்கிற ஆர்.காம் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனில் அம்பானியை தொடர்ந்து ராஜினாமா செய்தவர்கள்
இவரை தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்யத் தொடங்கினர். அந்நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் ஆகிய ஐவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களோடு ஆர்.காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அனைவரின் ராஜினாமாவும் நிராகரிப்பு
ஆனால் இவர்களின் ராஜினாமா கடிதத்தை கடன் கொடுத்தவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த தகவலானது மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அனில் அம்பானி உட்பட அனைவரது ராஜினாமா கடிதத்தையும் கடன்தாரர்கள் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. ஆர்.காம் நிறுவனத்தின் இயக்குனர்களாக தங்களது கடமையை தொடர்ந்து செய்யும்படியும், திவால் உட்பட்ட நடவடிக்கைகளை இருந்து மீள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications