இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!
20 ஆண்டுகளுக்குப் பின் 37,000 கிமீ பயணித்த யோஷின் கதை என்றதும் யார் இந்த யோஷி என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். பெயரே நல்லா இருக்கேப்பா என்று உங்கள் மனம் சொல்வதும் கேட்கிறது. இந்த படத்தில் இருக்கும் கடல் ஆமையின் பெயர் தான் யோஷி. இப்போ இந்த யோஷியின் கதை தான் சமூக வலைத்தளம் முழுதும் பேச்சு.

வலையில் சிக்கிய கடல் ஆமை குட்டி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் கடல் பகுதியில் கடந்த 1997ம் ஆண்டு, கடல் ஆமை குட்டி ஒன்று மீனவரின் வலையில் எதிர்பாராத விதமாகச் சிக்கியுள்ளது. வலையில் சிக்கிய குட்டி ஆமைக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்த மீனவர் உடனடியாக கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார்.

முற்றிலுமாக குணமடைய இத்தனை வருடமா? அடேங்கப்பா.!
தகவல் அறிந்த கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மைய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து காயமடைந்த அடல் ஆமை குட்டியை மீட்டுச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். கடல் ஆமை குட்டிக்கு நாள்தோறும் மருந்து கொடுத்து, பயிற்சி கொடுத்து காயங்களைப் சரி செய்து, நீந்தும் நிலைக்குக் குணமடையச் செய்துள்ளனர். ஆமை முற்றிலுமாக குணமடைந்து இயல்புநிலைக்கு வர 20 வருடங்கள் ஆகிவிட்டதாம்.

2 கிலோ எடை - 180 கிலோ எடை
20 வருடங்களுக்கு முன்பு வலையில் சிக்கிய போது, இந்த ஆமை வெறும் 2 கிலோ எடை தான் இருந்துள்ளது. ஆனால், இப்போது இதன் எடை 180 கிலோவைத் தாண்டியுள்ளது என்று பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, நன்றாக நீந்த தயாராகிவிட்டதினால் யோஷி ஆமையைக் கடலில் விட கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

யோஷியின் உடலில் ஜிபிஎஸ் கருவி
இதனைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி யோஷி கடலுக்குள் விடப்பட்டுள்ளது. கடலுக்குள் விடப்படுவதற்கு முன் யோஷியின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை சாட்டிலைட் மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் கண்காணிக்க முடியும், இதன் மூலம் யோஷி செல்லும் அனைத்து இடங்களின் தடங்களையும், இந்த ஜிபிஎஸ் கருவி பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் ஆமையின் இயல்பான சிறப்பு திறன்
இயல்பாகவே கடல் ஆமைகளுக்கு தங்களின் பிறந்த இடத்தை உணரும் திறன் அதிகம் உள்ளதென்று பல அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக யோஷி தான் பிறந்த இடமான ஆஸ்திரேலியா நோக்கி தனது பயணத்தைத் தென்னாப்பிரிக்காவிலிருந்து தொடங்கியுள்ளது. தினமும் யோஷி சுமார் 47 கிமீ பயணம் செய்துள்ளது.

37,000 கிமீ தூரத்தைக் கடந்த கடல் ஆமை
இப்படி தினமும் 47 கிமீ பயணம் செய்து, 26 மாதங்களுக்குப் பிறகு யோஷி ஆமை தான் பிறந்த இடமான ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளது. யோஷி ஆமை ஒட்டுமொத்தமாக சுமார் 37,000 கிமீ தூரத்தைக் கடல் வழியாகக் கடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 37,000 கிமீ கொண்ட 26 மாத கால பயணத்தை நாள்தோறும் தவறாமல் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த யோஷி
யோஷி இறுதியாகத் தனது பிறப்பிடம் என்று சென்றடைந்த இடம், வசதியான மனிதர்கள் வந்து செல்லும் மிகப் பிரபலமான தேனிலவு தளம் என்று பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்பட உயிரினத்தின் பட்டியலில் யோஷியின் பயணம் தான் நீண்ட தூரம் கொண்டது என்று புதிய சாதனையையும் யோஷி படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications