வெளியானது புதிய அறிவிப்பு.! இனி ரேஷன் கடைகளில் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தலாம்.!
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை தற்போது அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. இதுதவிர மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மே மாதம் முதல் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது கூட்டுறவுத்துறை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து இணைப் பதிவாளர்களுக்குக் கூட்டுறவுத் துறை பதிவாளர் சங்கர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், தமிழகத்தில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளில் விரைவு எதிர்வினை(QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள எதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர். இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒருவாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பின்பு இது குறித்து நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மண்டலங்களில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 31.05.2023-க்குள் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து நிறைவறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதேபோல் கடந்த ஆண்டே தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்து இருந்தார். குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூகுள் பே, பேடிஎம், போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், பிறகு படிப்படியாக அனைத்து கடைகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








