ரேஷன் கார்டு இருக்கும் குடும்பங்களுக்கு இதுதான் ரூல்ஸ்.. அடுத்த மாசம் கரெட்டா பொருள் வரனுமா.. இதை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தை (PDS) மேலும் வெளிப்படையானதாகவும், முறைகேடுகள் அற்றதாகவும் மாற்ற பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு இ-கேஒய்சி (e-KYC) மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
முன்பெல்லாம், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மூலம் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதனால் கார்டுதாரர் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் அந்த கார்டைப் பயன்படுத்தி பொருட்களைப் பெற்றுச் செல்லும் நிலை இருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கட்டுப்படுத்தவும், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்யவும், கைரேகை பதிவு செய்யும் (Biometric) முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் ஆதார் எண்ணை (Aadhaar Number) ரேஷன் கார்டுடன் இணைத்து, பயோமெட்ரிக் மூலம் இ-கேஒய்சி பதிவை முடிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்யாதவர்களின் பெயர்கள், ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், வெளியூர்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமப்படுவதாக தெரிகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு ஒரு குறிப்பிட்ட படிவத்தை வழங்குகிறது. இதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், அவர்கள் சார்பாக வேறொருவர் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய விதிமுறைகளின்படி, நியாய விலை கடைகளுக்கு செல்லும் போது, கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பினர் நேரில் சென்று தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து பொருட்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது அதிகாரப்பூர்வமான இணையதளத்தையோ அணுகித் தங்களின் பெயர் விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அரசு கொண்டு வந்துள்ள இந்த பயோமெட்ரிக் நடைமுறை, போலி கார்டுகளை கண்டறியவும், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை தவிர்க்கவும் உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. எனவே, கார்டுதாரர்கள் தங்களின் பதிவுகளை விரைந்து முடித்து, அரசின் சலுகைகளை எவ்வித இடையூறுமின்றிப் பெற ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்போது, ரேஷன் கார்டு பயோமெட்ரிக் அப்டேட் செய்யும் முறைகளை விரிவாக கீழே காணலாம். இந்த நடைமுறை மிகவும் எளிதானது, ஆனால் இதற்கு நீங்கள் நேரில் செல்வது கட்டாயமாகும். அருகில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று இதை செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் ஆதார் அட்டை (Aadhaar Card) தேவைப்படும்.
இதை நேரில் எடுத்து செல்ல வேண்டும். நியாய விலைக் கடையில் உள்ள பாயின்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரத்தில், விற்பனையாளர் உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, நீங்கள் இயந்திரத்தில் உள்ள சென்சாரில் உங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இந்ச விரல் ரேகை சரியாகப் பதிவானதும், அந்த விவரங்கள் அரசின் மத்திய சர்வரில் (Server) அப்டேட் செய்யப்பட்டுவிடும்.
பயோமெட்ரிக் அப்டேட் செய்யாத உறுப்பினர்கள் சென்றால் போதும், ஏற்கனவே பயோமெட்ரிக் அப்டேட் செய்திருந்தால் இது தேவைப்படாது. அதாவது, குறைந்தது ஒரு முறை செய்திருக்க வேண்டும். குழந்தைகள் அல்லது முதியவர்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விரல் ரேகை சரியாகப் பதிவாகவில்லை என்றால், ஆதார் கார்டில் மீண்டும் அப்டேட் செய்துவிட்டு, பிறகு பயோமெட்ரிக் அப்டேட்டை முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications