ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆகஸ்ட் 29-ல் சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மாதந்தோறும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருட்கள் உண்மையான மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு eKYC பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் eKYC மேற்கொள்ள தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை eKYC பதிவு செய்யாமல் தவறவிட்டவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு சிறப்பு வாய்ப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் விடுபட்ட பயனாளிகள் தங்களது விவரங்களை புதுப்பித்து, ரேஷன் பொருட்களை தொடர்ந்து எந்தத் தடையுமின்றி பெற முடியும்.

அதாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், இதுவரை eKYC சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்காக சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது eKYC சரிபார்ப்பை முடித்துக்கொள்ளலாம்.
சிறப்பு முகாம் குறித்த விவரங்கள்
முகாம் நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 29, சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்
சிறப்பு முகாமின் முக்கிய நோக்கம்
ரேஷன் அட்டைகளில் (Ration Card) இடம்பெற்றுள்ள போலியான அல்லது தவறான பெயர்களைக் கண்டறிந்து நீக்குவதுடன், உண்மையில் தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். இதற்காக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ரேஷன் கடைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு கைவிரல் ரேகை பதிவு மூலம் e-KYC செயல்முறையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கண் கருவிழி மூலம் eKYC சரிபார்ப்பு செய்யப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு eKYC கட்டாயமில்லை. 5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஆதார் விவரங்கள் தேவைப்படும்.

மேலும், குடும்பத் தலைவர் மட்டும் பதிவு செய்தால் போதாது, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாகக் கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்ய வேண்டும். இதுவரை eKYC செய்யாதவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதுடன், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. அதுவும் ஆதார் eKYC சரிபார்ப்பு பணியை உரிய முறையில் நிறைவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து பெறுவதற்கு வசதியாக இருக்கும்.
இந்த eKYC சரிபார்ப்புக்கு பொதுமக்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தமிழக அரசு இந்த சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications